தோஷம் கழிக்க வந்த பெண்ணை மயக்கமருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கோடாங்கி கைது
சென்னை : தோஷம் கழிப்பதாக கூறி, தண்ணீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த கோடாங்கியை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தை மறைத்த காரணத்துக்காக இளம்பெண்ணின் தாயையும் போலீசார் கைது செய்தனர். கோடாங்கிக்கும் அந்த வாலிபருக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது.
பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்தவர் மருதப்பன் இவரது மனைவி இந்திராணி,40. கட்டிட கூலி தொழிலாளி. இவர்களுக்கு பிரியா,19என்ற மகள் உள்ளார். (அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மருதப்பன் பிரிந்து சென்றார். இதையடுத்து இந்திராணி தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்

இந்தநிலையில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பம்பை, கோடாங்கி தொழில் செய்யும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த கார்த்திக், 28 என்பவருக்கும் இந்திராணிக்கு பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 3 நாட்களுக்கு முன் பிரியாவிற்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திராணி , அவரை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது, பிரியா கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
திருமணம் ஆகாமல் எப்படி கர்ப்பமானார் என டாக்டர் கேட்டதற்கு, இந்திராணி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. போலீசார் வந்து, தாய் மற்றும் மகளை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு போலீசார் இந்திராணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாதந்தோறும் அமாவாசை தினத்தில் இந்திராணி, மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு செல்வது வழக்கம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கோயிலில் பம்பை, கோடாங்கி தொழில் செய்யும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த கார்த்திக்,28 என்பவர் பழக்கம் ஆனார். அவரிடம், இந்திராணி தனியாக இருப்பதுடன் குடும்ப கஷ்டங்களையும் கூறியுள்ளார்.
அதற்கு கார்த்திக், இந்திராணிக்கு தோஷம் இருப்பதாகவும், அதை சரிசெய்ய பூஜை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அவரும் அதற்கு சம்மதித்தார். அதன்படி கார்த்திக், அதே பகுதியில் உள்ள அறையை வாடகைக்கு எடுத்து, ஒரு நாள் பூஜை செய்துள்ளார். அப்போது, விபூதி தண்ணீரில் மயக்க மருந்து கலந்து இந்திராணிக்குக் கொடுத்துள்ளார். அதில், அவர் மயங்கியதும், பலாத்காரம் செய்தது தெரிந்தது.
இதை தொடர்ந்து அவர்களுக்குள், தொடர்பு மேலும் நெருக்கமானது. கார்த்திக் அடிக்கடி கல்லுக்குட்டையில் உள்ள இந்திராணிக்கு வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 3 மாதத்துக்கு முன் இந்திராணி, தனது மகள் பிரியா, எந்நேரமும் சோகமாகவும், மன அழுத்தமாகவும் இருப்பதாக கார்த்திக்கிடம் கூறியுள்ளார். அதற்கு, அவருக்காக தனி பூஜை செய்ய வேண்டும் என கூறி, மேல்மலையனூர் பகுதியில் அறை தயார் செய்துள்ளார். அங்கு இந்திராணி மகளுடன் சென்றபோது, பூஜை பொருட்கள் வாங்கி வரும்படி கூறி இந்திராணியை அனுப்பி விட்டார்.
பின்னர், மயக்க மருந்து கலந்த விபூதியை தண்ணீரில் கலந்து பிரியாவிற்குக் கொடுத்துள்ளார். அதில், அவர் மயக்கமானதும், பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த இந்திராணி, அவரிடம் சண்டைபோட்டுவிட்டு, அங்கிருந்து சென்னைக்கு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்கிரவாண்டியில் தலைமறைவாக இருந்த கார்த்திக்கை, வியாழக்கிழமையன்று போலீசார் கைது செய்தனர். மேலும், சம்பவத்தை மறைத்த காரணத்துக்காக இந்திராணியையும் போலீசார் கைது செய்தனர். கார்த்திக், இதேபோல மேலும் பல பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications