புரட்சி பண்ண நான் ரெடி.. நீங்க ரெடியா? களத்தில் குதித்த விஷால்
சீமை கருவேல மரத்தை அகற்ற சிதம்பரத்தில் நடிகர் விஷால் களமிறங்கினார்.
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார் நடிகர் விஷால்.
சிதம்பரத்தில் துப்பறிவாளன் என்ற படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் சென்றுள்ளார். அப்போது, சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் மீதிகுடி கிராமம் அருகே சரஸ்வதி அம்மாள் நகரில் சீமைக் கருவேல மரம் அகற்றும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். அதைப்பார்த்த விஷாலும் களத்தில் இறங்கினார்.
ஊர் பொது மக்களுடன் சேர்ந்து அந்த கிராமத்து விவசாயிகள் பயன்படுத்தும் நெல் களத்தில் பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமலும் பாதுகாப்பில்லாமல் முல்புதர்களாக இருந்த சீமக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் விஷாலும் ஈடுபட்டார்.
இப்பணியில், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மணியனும் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய விஷால், கருவேல மரம் அழிப்பதை மாணவர்களால் மட்டும் முடியாது. பொது மக்களும் சேர்ந்து அதை அழிக்க வேண்டும்.
கருவேல மரத்தை வேரோடு பிடுங்க வேண்டும். இந்த நாட்டுக்கு விவசாயிகள் ரொம்பவே முக்கியம். நான் ரெடி... நீங்களும் கருவேல மரத்தை அகற்ற ரெடியா... நான் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும், கருவேல மரங்கள் அகற்றும் பணியில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் எனவும் விஷால் தெரிவித்தார்.