குஷ்பு இட்லி பார்த்திருப்பீங்க.. 'கிளிஞ்சல்' இட்லி சாப்பிட்டிருக்கீங்களா?
கிளிஞ்சல் வடிவிலான இட்லியை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னையைச் சேர்ந்த வானவில் இன்வென்டோரியம் என்ற அமைப்பு.
சென்னை: இட்லி என்றால் வட்டமாக, மெத்து மெத்து என்று இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளாக இட்லி இப்படித்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் இட்லிக்கு புது வடிவம் கொடுத்துள்ளது சென்னையைச் சேர்ந்த வானவில் இன்வென்டோரியம் என்ற நிறுவனம்.
செம வித்தியாசமாக இருக்கிறது இவர்களின் இட்லி வடிவத்தைப் பார்த்தார். கடல் கிளிஞ்சல் போலவே இருக்கிறது இந்த இட்லி. இந்த விசேஷ இட்லித் தட்டு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
வானவில் நிறுவனத்தைச் சேர்ந்த அனந்தநாராயணன் மற்றும் ஜோசப் பபின் ஆகியோர்தான் இந்த வித்தியாசமான இட்லித் தட்டை உருவாக்கி களம் இறக்கியுள்ளனர்.
ஹாபி கண்டுபிடிப்பு
இந்த வித்தியாசமான இட்லி தட்டு குறித்து அனந்தநாராயணன் கூறுகையில், நாங்கள் பொழுதுபோக்காக கண்டுபிடிப்புகளை செய்து வருகிறோம். வழக்கமான எங்களது வேலையைப் பார்த்துக் கொண்டே இதையும் செய்கிறோம் என்றார். அனந்தநாராயணன் விளம்பர நிர்வாகியாக இருக்கிறார். ஜோசப் ஆர்ட் டைரக்டர் ஆவார்.
2015 முதல்
2015ம் ஆண்டுதான் இந்த நிறுவனத்தை இவர்கள் தொடங்கினர். அதன் பிறகு இந்த இட்லித் தட்டை உருவாக்கி அதற்குக் காப்புரிமையும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தக் காப்புரிமை கிடைத்ததாம். இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த இட்லித் தட்டை வெள்ளோட்டம் விட்டுள்ளனர்.
விதம் விதமான இட்லிகள்
இந்த இட்லித் தட்டில் விதம் விதமான இட்லிகளை தயாரிக்கிறார்கள். அதாவது ரவா இட்லி, காய்கறி இட்லி, ஜாம் இட்லி, கேரட் இட்லி, மல்லி இட்லி என ரகம் ரகமாக கலக்கலாம். விரைவில் இந்த இட்லி தட்டை மார்க்கெட்டில் இறக்கவுள்ளனர். இதற்காக ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சு நடந்து வருகிறதாம்.
செம வரவேற்பு
இந்த இட்லித் தட்டு குறித்து தங்களது இணையதளத்திலும், சமூக வலைதளத்திலும் இவர்கள் போட்டுள்ளனர். இதைப் பார்த்து ஏகப்பட்ட வரவேறபாம். தட்டு ஆர்டர் கேட்டும் கால்கள் குவிகிறதாம். இதுகுறித்து அனந்தநாராயணன் கூறுகையில் யூடியூபில் இதுதொடர்பான வீடியோ போட்டுள்ளோம். அதை இதுவரை 7000 பேருக்கு மேல் பார்த்துள்ளனர் என்றார் அவர்.