அனல் பறக்கும் வெயில்… தர்பூசணி, பழரசங்கள் விற்பனை படுஜோர்!
சென்னை: தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரத்திற்கு ஈடாக வெயில் கொளுத்தி வருவதால், குளிர்பானங்கள், தர்பூசணி பழங்களின் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.
கடந்த ஆண்டு போதிய அளவுக்கு மழை இல்லாததால் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை காலத்தின் துவக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
காலையிலேயே வெயில் கடுமையாக இருப்பதால் வெளியே தலை காட்டவே மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சேலத்தில் கொதிப்பு
சேலம் மாவட்டத்தின் நான்கு திசைகளை சுற்றியும் மலைகள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் குளிர் நிலவினாலும், பகலில் வெயிலின் தாக்கம் இங்கு அதிகளவில் உள்ளது. குளம், குட்டை, கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கிறது. இதனால் பகல் நேரங்களில் கானல்நீர் வீசி வருகிறது.

உஷ்ணம் அதிகம்
கடந்த ஒரு வாரமாகவே சேலத்தில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினாலே பொது மக்கள் தலைவலி மற்றும் உஷ்ணம் தாங்காமல் அவதிப் படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

101.9 டிகிரி வெப்பம்
சேலத்தை பொறுத்தவரை நேற்று முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் உள்ளது. நேற்று சேலத்தில் 101.9 டிகிரி வெயில் நிலவியது. இன்றும் அதே அளவுக்கு வெயில் நிலவி வருகிறது. இதனால் ரோடுகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

அனல் காற்று
பகலில் அனல் காற்று வீசுவதால் சாலையில் நடந்து சென்ற வர்களும், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் மிகவும் அவதிப்பட்டனர். பள்ளி மாணவ- மாணவிகள், வாகன ஓட்டிகள், பஸ் பயணம் செய்வோர், முதியோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அக்னியில் அதிகரிக்கும்
இதே நிலை நீடித்தால் சேலத்தில் கோடை காலமான ஏப்ரல், மே, ஜுன் மாதங்களிலும் மற்றும் அக்னி நட்சத்திர காலத்திலும் சுமார் 110 டிகிரி அளவுக்கு வெயில் அடிக்கும் என்று தெரிகிறது. தற்போது மேக கூட்டம் இல்லாமல் இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. தொடக்கத்திலேயே 101.9 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது. இன்னும் அதிகரிக்கலாம் என்று சேலம் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தண்ணீர் விற்பனை
கோடை வெயிலின் தாக்கம் வாட்டி எடுத்து வரும் வேளையில் தண்ணீர் பஞ்சமும் கடுமையாக இருப்பதால் மக்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகி வருகின்றனர். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காத நிலை உள்ளதால் உடல் வெப்பத்தை தணிக்க பல்வேறு குளிர்பான கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

குளிர்பானங்கள் விற்பனை
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் காரணமாக குளிர்பானம், ஜுஸ், இளநீர், ஐஸ்கிரீம், மோர் ஆகியவை விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது திண்டுக்கல் நகரின் பெரும்பாலான இடங்களில் தர்பூசணி விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

தர்பூசணி, நுங்கு விற்பனை
ரசாயன கலவை நிறைந்த குளிர்பானங்களை விட இயற்கையாக கிடைக்கும் இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரி போன்றவை தாகத்தை தணிப்பதுடன் உடல் உஷ்ணத்தையும் போக்கும் என்பதால் இதனை பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications