அதிமுகவுடன் கூட்டணி.. தெளிவாக இருக்கும் பாஜக.. பொன் ராதாகிருஷ்ணன் சொன்ன முக்கியமான விஷயம்
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம் என பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கும்பகோணம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம். உலகத்திலேயே கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் கிடையாது. அது போலத் தான் பாஜக-அதிமுகவில் உள்ளக் கருத்து வேறுபாடு என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜக அதிமுக இடையே அண்மைக்காலமாக மோதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதிமுகவினரோ, பாஜகவினரோ இப்போது யாருமே பேசுவது இல்லை. மாறாக கூட்டணி தொடரும் என்றே பேசி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சக்திகேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பாஜகவில் மாற்றுக்கருத்து
அப்போது அவர் பேசும் போது, " வரும் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக உன்னதமான வெற்றியை பெற உழைக்க வேண்டும். அதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இந்த உலகத்துலேயே கிடையாது. அது போலத் தான் பாஜக-அதிமுகவில் சில மாற்றுக்கருத்துக்கள் இருந்தது.

கூட்டணி
அதிமுகவில் பிரிந்துகிடப்பவர்கள் சேர்ப்பதற்கு என்ன முயற்சி செய்கிறார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியாது. அது அந்த கட்சியினுடைய விஷயம். கருத்து வேறுபாடு காரணமாக சிலர் ஒரு கட்சியிலிருந்து வெளியேறுவது பல கட்சிகளில் நடந்திருக்கு. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும். தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற நாம் உழைக்க உள்ளோம்" என்றார்.

திமுக மீது புகார்
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் சக மாணவர்களைக் கொலை செய்வது, ஆசிரியர்களை மாற்ற வேண்டும் என மாணவர்கள் போராட்டம் செய்வது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்தது இல்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். திமுக அரசு சரியான முறையில் தன்னுடைய நிர்வாகத்தை செய்யாமல் போனால், தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார்.

45 ஆண்டு அரசியல்
முன்னதாக திருச்சியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.,ராதாகிருஷ்ணன் நேற்று பேசும் போது, "மக்களவைத் தோதலில் பாஜக யாருடன் கூட்டணி வைத்தாலும் திருச்சி மக்களவை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கும் நிலை ஏற்படும் வகையில் கோட்டையாக மாற்றுங்கள். கட்சியின் அனைத்து நிா்வாகிகளும் இதற்காக இணைந்து செயலாற்ற வேண்டும். கடந்த 45 ஆண்டு கால அரசியலில் தமிழகத்தில் தற்போது பாஜகவுக்கு குறிப்பிடத் தகுந்த வளா்ச்சி கிடைத்துள்ளது. இதை என்னால் நேரில் உணர முடிகிறது" என்றாா்.












Click it and Unblock the Notifications