சசிகலா தலைமை ஏற்றால் நாங்கள் தீக்குளிப்போம்.. அதிமுகவினர் கொந்தளிப்பு
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கு அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றால் நாங்கள் தீக்குளிப்போம் என அக்கட்சி தொண்டர்கள் கூறிவருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடல் நிலை பாதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவை தொடர்ந்து நிதியமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் அன்று இரவே முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது அதிமுகவை வழிநடத்த எவரும் இல்லை என்றும், அதனால் பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஏற்கவேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று போயஸ் கார்டன் சென்ற அதிமுக நிர்வாகிகள் மதுசூதனன், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே முதல்வர் பன்னீர்செல்வமும் சசிகலா அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பின்னி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதிமுக தொண்டர்கள் போயஸ் தோட்டத்திலும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வருகின்றனர். இந்தநிலையில் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளே கட்சியை வழிநடத்த தகுதியானவர்கள் எனவே அவர்களைத் தான் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் எனவும் சசிகலா தலைமை பொறுப்பை ஏற்றால் நாங்கள் தீக்குளிப்போம் எனவும் தொண்டர்கள் கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.