சென்னை சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா? என்ன சொல்கிறார் டிடிவி.தினகரன்
சசிகலாவை சென்னை சிறைக்கு கொண்டுவர முயற்சிக்கவில்லை என அதிமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை என அவரது அக்காள் மகனும் அதிமுக துணைப் பொதுச்செயலாளருமான டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவர்கள் 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சரணடைந்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னைக்கு மாற்ற முயற்சி
நேற்று சசிகலா தரப்பு ஆதரவு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்றது. இதனிடையே சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ளதால் அவரை கேட்டுதான் கட்சிப் பணிகளை செய்யவேண்டும் என கூறி அவரது குடும்பத்தினர் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற முயற்சிப்பதாக செய்திகள் வெளியாயின.

செய்தியாளர்கள் கேள்வி
இந்நிலையில் நேற்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் பரவி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அக்காள் மகன் மறுப்பு
அதற்கு பதிலளித்த தினகரன், சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை என்றார். மேலும், நாளை கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம் என்றும் அவர் கூறினார்.

சென்னைக்கு வர ஆர்வம்
பெங்களூருவில் பாதுகாப்பு இல்லை எனக் கூறுவதற்காக சசிகலா தரப்பே அவர் சரணந்த தினத்தன்று வாகனங்களை அடித்து உடைத்து நடத்திய நாடகம் கர்நாடக போலீசாரால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சசிகலா தரப்பு விரைவில் சென்னை சிறைக்கு வரவே ஆர்வம் காட்டி வருவது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications