மதிமுகவினர் அவர்களாக விரும்பி வந்து சேருகிறார்கள்.. வைகோ குற்றச்சாட்டிற்கு ஸ்டாலின் விளக்கம்
சென்னை: மாற்று கட்சியில் இருந்து அவர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வந்து இணைகிறார்கள். எதற்காக சேருகிறீர்கள் என அவர்களைக் கேட்க முடியாது என மதிமுகவினர் திமுகவில் இணைந்து வருவது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.
கடந்த சில நாட்களாக மதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலர் அதிரடியாக திமுகவில் இணைந்து வருகின்றனர். திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது கட்சியை உடைக்க நினைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், மு.க.ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், கூறியதாவது:-

தங்களின் பயணம் எப்படி இருக்கும்?
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 3 கட்டமாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். இந்த பயணத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் கருத்துகளை கேட்க இருக்கிறேன்.

மக்களின் பிரச்சினைகள்...
அவர்களிடம் பிரச்சினைகள் குறித்தும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்பட பிரச்சினைகள் பற்றியும் கேட்பேன். தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து தெரிவிப்பேன்.

மதிமுகவினர் தி.மு.க.வில் இணைவது குறித்து?
மாற்று கட்சியில் இருந்து அவர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வந்து இணைகிறார்கள். எதற்காக சேருகிறீர்கள் என கேட்க முடியாது.

வைகோவின் குற்றச்சாட்டு?
சில மாதங்களுக்கு முன் எங்கள் இல்ல திருமணத்தில் வைகோ என்னவெல்லாம் பேசினார். இப்போது அதற்கு நேர்மாறாக பேசுகிறார். யாருடைய நிர்ப்பந்தத்திற்காக வைகோ மாறி மாறி பேசுகிறார் என்று தெரியவில்லை. இதன் பின்னணி பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்' என இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications