போட்டோ போட்டு நியூஸ் வந்துச்சே, கருணாநிதி பார்க்கவே இல்லையா... ராமதாஸ்
சென்னை: புதுச்சேரியில் மது விலக்கை அமல்படுத்த நான் கோரிக்கை வைக்கைவில்லையே என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். புதுச்சேரியிலும் நாங்கள் தான் முதல் முதலாக சாராயக் கடைக்குப் பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினோம். அதுகுறித்து புகைப்படத்துடன் செய்தி வெளியானதே. அதை கருணாநிதி பார்க்கவில்லையா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
23.02.2012 அன்று புதுவையில் நடந்த கூட்டத்தில் புதுச்சேரியில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்று பேசும் இதே ராமதாஸ், பக்கத்திலே உள்ள புதுவை மாநிலத்திலே மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்று ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி மட்டுமல்ல. நாடு முழுவதும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. பலமுறை இதை நானும், அன்புமணியும் வலியுறுத்தியிருக்கிறோம்.
உதாரணத்துக்கு ஒன்றிரண்டைக் கூற வேண்டுமானால், 20.11.2010 அன்று புதுவை பா.ம.க. தலைமை அலுவலகத் திறப்பு விழாவில் பேசும் போது புதுவையில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் கள், சாராயக்கடைகள் மூடப்படும் என அறிவித்தேன்.
தொடர்ந்து 23.07.2011 அன்று புதுச்சேரியில் பா.ம.க.வைச் சேர்ந்த மறைந்த பெண் தமிழறிஞர் மதுரகவியின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டு பேசும்போது, புதுவையில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
17.07.2012 அன்று தமிழகத்தில் மட்டுமின்றி புதுவையிலும் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மதுக்கடைகளை மூட பூட்டுக்களுடன் வந்த பெண்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட செய்தி படங்களுடன் நாளிதழ்களில் வந்ததை கலைஞர் பார்க்கவில்லையா?
வாக்கில் உண்மை இல்லாத போது நாக்கில் வார்த்தைகள் தடுமாறும் என்பார்கள். அதேபோல் தான் இந்த பிரச்னையில் கலைஞரிடம் உண்மையில்லாததால், தவறான குற்றச்சாற்றுகளைக் கூறி வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications