குஷ்புவை வைத்து காங்கிரஸை வளர்க்க வேண்டிய நிலை வந்து விட்டதே... தமிழிசை "வேதனை"!
சென்னை: தமிழகத்தில் குஷ்புவை வைத்து காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் நிலை வந்து விட்டது. ஆனால் பாஜகவுக்கு அப்படிப்பட்ட கவர்ச்சி அரசியல் தேவையில்லை, தேவையும்படாது என்று பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை பேசுகையில், தமிழகத்தில் பா.ஜ.க. எங்கே இருக்கிறது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்கிறார். கண்ணாடி அணிந்திருந்தும் அவருக்கு பா.ஜ.க. வளர்ந்து கொண்டிருப்பது தெரியவில்லை. காமராஜரை மறந்து குஷ்புவை மட்டும் வைத்து கட்சியை நடத்தும் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிதான் துண்டு துண்டாக உடைந்துள்ளது. முதலில் அவர் கட்சியை பாதுகாத்துக் கொள்ளட்டும். நாங்கள் கவர்ச்சி அரசியலை நடத்தவில்லை. கொள்கை பிடிப்போடு நடத்துகின்றோம். அதனால் நிறைய பேர் எங்கள் கட்சியில் இணைக்கின்றனர்.
மதம் சார்ந்த பிரச்சினை இல்லாமல், மனிதம் சார்ந்த பிரச்சினைகளை நாங்கள் முன்னெடுக்கிறோம். பா.ஜ.க.வில் தமிழகத்தில் இருந்து சராசரியாக தினமும் 25 ஆயிரம் பேர் உறுப்பினராக இணைகிறார்கள். வரும் 1-ந் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உள்ளோம்.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசின் மெத்தன போக்கே இதற்கு காரணம். போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.
போராட்டம் என்று 15 நாட்களுக்கு முன்பே போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். தமிழக அரசு இதை கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கது. நேற்று ஒரு நாள் மட்டும் பஸ் ஓடாததால் அரசுக்கு ரூ.17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், போராட்டம் தொடர்ந்தால் இன்னும் இழப்பு அதிகரிக்கும். எனவே, போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்து பேசி சுமூக தீர்வுகாண வேண்டும்.
ஆவின் பால் ஊழலில் ஈடுபட்டவர்களை சட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதித்துறையின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஊழலை கண்டுபிடித்த அதிகாரிகளை மாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது கண்டனத்திற்கு உரியது. மழை காலம் தொடங்கி விட்டது. சென்னையில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. எனவே, சாலையை செப்பனிடும் பணியில் முதலில் மாநகராட்சி ஈடுபட வேண்டும் என்றார் தமிழிசை.