அத்தனை ஆதாரங்களும் "பக்கா".. ராம்குமார் தப்பவே முடியாது.. அடித்துக் கூறும் போலீஸ்!
சென்னை: சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரித்தாலும் கூட எங்களுக்குக் கவலை இல்லை. காரணம், ராம்குமாருக்கு எதிரான ஆதாரங்கள் அந்த அளவுக்கு பக்கவாக உள்ளது. யார் இந்த வழக்கை விசாரித்தாலும், நாங்கள் கண்டுபிடித்துள்ள எந்த ஆதாரத்தையும் நிராகரிக்க முடியாது. அந்த அளவுக்கு தெளிவாக சேகரித்துள்ளோம். ராம்குமார் இந்த வழக்கிலிருந்து நிச்சயம் தப்ப முடியாது என்று தமிழக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ராம்குமாருக்கு எதிராகத்தான் பல ஆதாரங்கள் உள்ளன. சந்தர்ப்ப சூழல் மட்டுமல்லாமல் அவரே இந்தக் கொலையை தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அவருக்கு எதிரான ஆதாரங்களும் முழுமையாக உள்ளன.
கோர்ட்டில் இந்த ஆதாரங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு இவை தெளிவாக உள்ளன, முழுமையாக உள்ளன. எனவே ராம்குமார் தப்புவது கடினம்தான் என்றும் நுங்கம்பாக்கம் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆரம்பத்திலிருந்தே குழப்பம்
சுவாதி கொலை வழக்கின் ஆரம்பத்திலிருந்தே பல குழப்பங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. சுவாதி கொலை தொடர்பாக சிலர் பேஸ்புக்கில் போட்ட கருத்துக்கள் மதக் கலவரத்தைத் தூண்டும் அளவுக்கு பரபரப்பாக இருந்தன.

சிசிடிவி படங்கள்
ஆரம்பத்தில் சுவாதியைக் கொலை செய்தது யார் என்பதில் தெளிவான தகவல் இல்லை. அதன் பிறகுதான் சிசிடிவி படங்கள் வெளியாக ஆரம்பித்தன. ஆனால் அதிலும் பின்னர் குழப்பம் வந்தது. போலீஸார் முதலில் வெளியிட்ட சிசிடிவி படத்துக்கும், பின்னர் என்ஹான்ஸ் செய்து வெளியிட்ட படத்துக்கும் இடையே ஆயிரம் வித்தியாசங்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

பிடிபட்ட ராம்குமார்
இந்த நிலையில் ராம்குமார் பிடிபட்டார். ஆனால் அவரது கைதுக்குப் பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அளித்த பேட்டியின்போது ராம்குமார்தான் குற்றவாளி என்று கோர்ட்டில் தீர்ப்பு சொல்வது போல கூறினார். இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் கூட தனது விசாரணையின்போது சுட்டிக் காட்டியது.

பொய் வழக்கா?
ராம்குமார் கைதுக்குப் பிறகுதான் பல குழப்பங்கள் வெடித்தன. உண்மையில் இவர் வெறும் கருவியே. இவரை யாரோ சிலர் தூண்டி விட்டுள்ளனர். இவர் மீது பொய் வழக்குப் போட்டு விட்டனர். ராம்குமார் அப்பாவி, உண்மையான குற்றவாளியை காப்பாற்ற போலீஸ் தரப்பு முயற்சிக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வரத் தொடங்கின.

மறுக்கும் போலீஸார்
ஆனால் போலீஸார் தெளிவாகச் சொல்கின்றனர் - ராம்குமார் மீதான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. அவர்தான் உண்மையான கொலையாளி. அதில் சட்ட ரீதியாக எந்த சந்தேகமும் இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் போலீஸார்.

தடயவியல் சோதனை முடிவு வரட்டும்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் தற்போது நாங்கள் சிசிடிவி படங்களின் தடயவியல் சோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். அதில் படத்தில் இருக்கும் நபரும், ராம்குமாரும் ஒன்றுதான் என்று உறுதியாகி விட்டால் இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிந்து விடும்.

அனைத்து ஆதாரமும் ரெடி
ராம்குமாருக்கு எதிராக அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் திரட்டி விட்டோம். அவர் பயன்படுத்திய அரிவாள் உள்பட அனைத்தும் பக்காவாக சேகரிக்கப்பட்டு விட்டது. கோர்ட்டுக்குத் தேவையான அனைத்து ஆதராங்களும் எங்களிடம் தற்போது உள்ளது.

யாரும் நிராகரிக்க முடியாது
நாங்கள் சேகரித்துள்ள ஆவணங்களை எந்த விசாரணை அமைப்பும் நிராகரிக்க முடியாது. அந்த அளவுக்கு தெளிவாக, கவனமாக சேகரித்துள்ளோம். எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தாலும் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம். உண்மையில் சிபிஐ விசாரணை மிக மிக எளிதாகவே இருக்கும். காரணம், அதற்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் ஏற்கனவே சேகரித்து விட்டோம் என்பதால்.

கோபம் - ஆதங்கம்- வருத்தம்
தவறு செய்தபோது ராம்குமாரின் மனதில் கோபமும், ஆதங்கமும்தான் அதிகம் இருந்துள்ளது. இதனால் தனது செயல் அவருக்கு நியாயமாகவே பட்டுள்ளது. ஆனால் இப்போது அதற்காக வருந்துகிறார். எங்களது விசாரணைக்கு ராம்குமார் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் என்று போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications