தேமுதிகவை அழைத்திருக்கிறோம்... நல்ல முடிவு வரும்: ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ஏற்கனவே கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பை ஏற்று நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் விறுவிறுப்படைந்துள்ளன.
தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். அந்த வகையில், சுமார் 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு காங்கிரசுடன் கை கோர்த்துள்ளது
இந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏ எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படவில்லை. கூட்டணியில் சேர தேமுதிகவுக்கு திமுக தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்று அவர்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி என்று கூறினார்.
கருணாநிதி - குலாம் நபி ஆசாத் இடையேயான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், திமுக - காங். கூட்டணி அமைக்க உடன்பாடு மட்டும் ஏற்பட்டுள்ளது என்றார். குலாம்நபி ஆசாத்துடன் தொகுதி எண்ணிக்கை பற்றி பேசவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், திமுக கூட்டணியில் தேமுதிக இணைய அழைப்பு விடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ஏற்கனவே கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பை ஏற்று நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
மேலும், பாஜக உடனான கூட்டணி பற்றி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தது அவரது கருத்து என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.