சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற கண் அயராமல் உழையுங்கள்: ஜெ. வேண்டுகோள்
சென்னை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பதே கேள்வி என அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை 31-1-2016 அன்று (நேற்று) ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் நேரில் சந்தித்து, ஈரோடு புறநகர் மாவட்டத்தின், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை, வார்டு கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் சார்பில் ‘‘கட்சி வளர்ச்சி நிதியாக'' ஒரு கோடியே 50 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

இதேபோல், ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமாரும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்களும் நேரில் சந்தித்து, ஜெயலலிதா பேரவையின் சார்பில் ‘‘கட்சி வளர்ச்சி நிதியாக'' ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்கினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவை மாவட்ட செயலாளர்களிடம் ஜெயலலிதா கூறுகையில்,
பேரவை மாவட்ட செயலாளர்களை எல்லாம் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடமை உணர்ச்சியோடு கட்சியின் வளர்ச்சிக்காக நிதி திரட்டி அதை என்னிடம் அளித்த உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. நாம் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளோம். சட்டசபை தேர்தலில் நாம் புதிய வரலாறு படைக்க வேண்டும் என்பதே நம் லட்சியம். வரும் சட்டசபை தேர்தலில் நாம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் எத்தனை இடங்களில் வெற்றி பெற உள்ளோம் என்பதே கேள்வி.
அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால், நாம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றியை பெற மாவட்ட பேரவை செயலாளர்கள் இரவும் பகலும் கண் அயராது பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த வெற்றியை சாதித்துக் காட்ட வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications