மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
திருச்சி: மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம் என்றும் விவசாயிகளுக்காக தொடர்ந்து தமிழக அரசு செயல்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.
தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பகுதிகளை ஆய்வு செய்த பிறகு முதல்வர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாயிகளின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக திமுக அரசு செயல்படும். விவசாயிகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்றன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய சேத்தியாத்தோப்பு, மைக்கேல் பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்ட உடனேயே அடுத்த நிமிடமே நம்முடைய அரசு அதை எதிர்த்து போராடியது. மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் நானே அறிவித்தேன்.
இதன் விளைவாக ஏல அறிவிக்கையை ஒன்றிய அரசு ரத்து செய்தது உங்களுக்கு தெரியும். டெல்டாவின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசு திமுக அரசு.. தொடர்ந்து செயல்படும். அதேபோல காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள வேளாண் வளர்ச்சிக்கும் இந்த பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களை தூர்வாருவதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த வகையில் காவிரி பாசன பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வாருவதற்காக கடந்த 2021 -22 ஆம் ஆண்டு ரூ. 62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கால்வாய்களை தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றது. மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும் நாளான ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது. அதோடு வேளாண் பெருமக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்படது.
இதன் விளைவாக காவிரி டெல்டா பகுதிகளில் வரலாற்று சாதனையை நாம் எட்டினோம். சாதனை என்று சொல்வதை விட வேளாண் புரட்சியே நடந்தது என சொல்லாம். 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் காவிரி பாசன பகுதிகளில் தூர்வாருவதற்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றது.
ரூ.5 கோடி செலவில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். 95 சதவிகித தூர்வாரும் பணிகள் நிறைவு அடைந்து விட்டன. எஞ்சிய பணிகளும் ஓரிருநாளில் முடியும். நடப்பாண்டில் டெல்டாவில் தூர்வாரும் பணிகளுக்காக 90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர்களுக்கு கடன் மற்றும் இடுபொருட்கள் வழங்குவது நடந்து முடிந்துள்ளது. ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்க இருக்கிறேன்.
சென்ற ஆண்டுகளில் சாதித்து காட்டியது போலவே அனைத்து தூர்வாரும் பணிகளும் சிறப்பாக முடிக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 2 ஆண்டுகளை போலவே நீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்போம் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலினிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து கேள்வி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், புதிதாக வந்து இருக்கும் காங்கிரஸ் அரசு மட்டும் இல்லை. ஏற்கனவே இருந்த அரசும் மேகதாது அணையை கட்டுவோம், கட்டுவோம் என சொல்லி வந்தது. அப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். அதே நிலையில்தான் இன்றும் இருக்கிறோம். கருணாநிதி எப்படி உறுதியாக இருந்தாரோ அதெபோலத்தான்.
இதே உறுதியோடு நிச்சயமாக இருப்போம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம். அதிமுக ஆட்சியின் போது மின் கட்டணம் செங்குத்தாக உயர்த்தப்பட்டது. பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். என்று கூறினார்.












Click it and Unblock the Notifications