'இந்தியர்' மோடி 'இந்து'வாக மாறினால் அவர் பக்கத்தில் இருக்க மாட்டோம் - தமிழருவி மணியன்
சென்னை: பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் குஜாரத் கலவரமும் நல்ல அரசியல் அல்ல. இந்தியர் என்றுதான் மோடி பேசி வருகிறார். இந்து என்று அவர் பேசினால் நாங்கள் அவரது பக்கத்தில் இருக்க மாட்டோம் என்று தமிழகத்தில் முரண்பாடான பாஜக கூட்டணி அமைய காரணகர்த்தாவாக அமைந்த தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது இப்படித் தெரிவித்தார் மணியன்.
ஸ்ரீபெரும்புதூர் மதிமுக வேட்பாளர் டாக்டர் மாசிலாமணியை ஆதரித்து தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில் தமிழருவி மணியன் பேசியதிலிருந்து....

ஸ்டாலின் பேச்சு
ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டுகிறார் ஸ்டாலின். அவரது பேச்சு, 2016-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஒத்திகையாக உள்ளது.

நம்பினால் வாக்களியுங்கள்
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை சீரழித்துவிட்டனர் காங்கிரஸ் கட்சியினர். மோடிக்கு நிர்வாகத் திறன் இருக்கிறது என்று நம்பினால் வாக்களியுங்கள்.

உருப்படாமல் போன 3வது அணி
மூன்றாவது அணியை அமைக்க 14 கட்சிகளை அழைத்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார்கள் இடதுசாரிகள். மூன்றாவது அணி இதுவரை உருவாகவில்லை. இல்லாத ஊருக்கு செல்லாத பாதையில் பயணிப்பதுதான் இந்த மூன்றாவது அணி.

திராவிடக் கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியை முரண்பட்ட கூட்டணி என்கிறார்கள்.

முரண்பட்ட கூட்டணிதான்
முரண்பட்ட கூட்டணி என்பதை நான் மறுக்கவில்லை. கடந்த 1967 தேர்தலில் காங்கிரஸை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழகத்தில் தி.மு.க., ராஜாஜியின் சுதந்திரா கட்சி, சி.பி.எம்., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை கூட்டணி அமைத்தன. அப்படி முரண்பட்ட கூட்டணி அமைத்த தி.மு.க., இப்போது பி.ஜே.பி. கூட்டணியை எப்படி விமர்சிக்கலாம்?

காங்கிரஸை அகற்றத்தான் கூட்டணி
இப்போது நாங்களும் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றத்தான் இந்தக் கூட்டணியை அமைத்திருக்கிறோம். 1967-ல் தி.மு.க. கூட்டணிக்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள். அதைப் போன்று இந்தத் தேர்தலிலும் பாஜக கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவார்கள்.

சீக்கியர் படுகொலை
மோடியை விமர்சிக்க குஜராத் கலவரத்தை மட்டுமே சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படியென்றால் கடந்த 1984-ல் இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றபோது 3,874 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுதொடர்பாக ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தெளிவாகக் கூறியுள்ளது. அப்படி இருந்தும் காங்கிரஸ் கட்சி 58 ஆண்டுகளாக நாட்டை ஆண்டுள்ளது.

ஜின்னாவால் கூட முடியவில்லையே
இந்தியாவுக்கு ஒரு நாள் முன்பு விடுதலை பெற்ற பாகிஸ்தானை முகமதுஅலி ஜின்னா மதச்சாப்பற்ற நாடாக மாற்றுவேன் என்று கூறினார். ஆனால், அதை அவரால் செய்ய முடியவில்லை. ஆனால் இந்தியா 67 ஆண்டுகளாக மதசார்பற்றதாகவும் ஜனநாயக நாடாகவும் இருக்கிறது. வாக்குக்காக இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

பாபர் மசூதி இடிப்பு- குஜராத் கலவரம் நல்லதல்ல
பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் குஜாரத் கலவரமும் நல்ல அரசியல் அல்ல. இந்தியர் என்றுதான் மோடி பேசி வருகிறார். இந்து என்று அவர் பேசினால் நாங்கள் அவரது பக்கத்தில் இருக்க மாட்டோம்.

வைகோ மீது எப்படி குறை கூற முடியும்
வைகோ மீது குறைகள், களங்கத்தை சுமத்த முடியாது. எனவே மோடி பிரதமராக பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.

காங்கிரசை வீழ்த்த
இதற்கிடையே ஈரோட்டில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் தமிழருவி மணியன் பேசுகையில், பாரதிய ஜனதா தலைமையில் தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி முரண்பட்ட கூட்டணி அல்ல; கொள்கை அடிப்படையில் தனித்தனியாக இருப்பவர்கள் காங்கிரஸை வீழ்த்த ஓரணியில் நிற்கின்றனர். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்கிற நிலையை இந்தக் கூட்டணி உருவாக்கியுள்ளது.

மோடி பிரதமராவது உறுதி
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்று சொன்னார்கள். விஜயகாந்த், வைகோ ஒன்றாக பிரச்சாரம் செய்தபோதே வைகோ வெற்றி பெற்றுவிட்டார். மத்திய அமைச்சராகவும் வைகோ வருவதும் உறுதி. நரேந்திர மோடி பிரதமராவது என்பது எழுதப்பட்ட தீர்ப்பு. நாடு உருப்பட வேண்டும் என தமிழக மக்களுக்கு அக்கறை இல்லாமல் போய்விடுமா?

அதிமுக நிலை மாறிவிட்டது
காசு கொடுத்தால் ஓட்டு கிடைக் கும் என்றால் 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்றுப்போயிருக்காது. 40 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்று சொன்ன அதிமுக தற்போது 20 தொகுதி களில் ஜெயிப்போம் என்று தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டது. அதிமுக, திமுக கட்சிகள் யாரை பிரதமராக்க ஓட்டு வாங்கு கின்றனர் என்றே தெரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications