ராஜபக்சேவை வரவேற்பதில் என்ன தப்பு.. தனி ஈழமெல்லாம் அமையாது.. பாஜக ராஜா 'பளார் பளார்...'!
சிவகங்கை: தனி ஈழம் குறித்தும், ராஜபக்சே குறித்தும், ஈழத் தமிழர் விவகாரம் குறித்தும் பாஜகவின் உள் மனதில் என்ன உள்ளது என்பதை அக்கட்சியின் சிவகங்கை வேட்பாளரான எச்.ராஜா தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜபக்சே இந்தியாவுக்குள்ளேயே வரக் கூடாது என்பதற்காக மத்தியப் பிரதேசம் வரை போய் கடுமையாக போராடி வந்தவர் வைகோ. அவர் கை கோர்த்துள்ள பாஜகவோ, ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவேற்பதில் என்ன தவறு என்று கேட்டுள்ளது.
ராஜாவின் பேச்சுக்கு மதிமுக என்ன பதில் சொல்லப் போகிறது என்பது தெரியவில்லை. முரண்பாடான இந்தக் கூட்டணியின் முரண்பாடுகள் ஆரம்பத்திலேயே வெடித்து வெளிக் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையில் வைத்து ராஜா செய்தியார்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது...

தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை
கேள்வி - ஒரே கூட்டனியில் உள்ள வைகோ வின் மதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தனி தமிழ் ஈழம் என்பதை வெங்கையா நாயுடு அது மதிமுகவின் தேர்தல் அறிக்கை பா.ஜ.க கூட்டனி அறிக்கை இல்லை என்று மறுத்துள்ளாரே?
ராஜா - ஆம். இதனால் கூட்டனியில் பிளவு என்று சொல்ல முடியாது. எல்லா கட்சிகளும் ஒரே கொள்கையில் இருக்க முடியாது. நாங்கள் தேசிய கட்சி எங்களுக்கு என்று கொள்கைகள் உள்ளது. மாநிலக் கட்சிகளுக்கும் தனி கொள்கைகள் உண்டு. ஒரே கொள்கையாக இருந்தால் ஒரே கட்சியாக இருந்திருக்கும்.

நாட்டைப் பிரிக்க முடியாது
பா.ஜ.க வைப் பொருத்தவரை ஒரு நாட்டை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பேச்சு வார்த்தையின் மூலம் தான் தீர்வு காண முடியும். என்பது எங்கள் நிலை.

கோத்தபயா சொன்னது என்ன...
சம தர்மம், சம உரிமை என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால் 2004 வரை பேச்சுவார்ததைகள் தான் நடந்து வந்தது. அதன் பிறகு சோனியா காந்தி தலைமையில் வந்த ஆட்சி தான் ராணுவத்தை அனுப்பியது. இலங்கை ராணுவத்துடன் இந்திய ராணுவமும் அனுப்பப்பட்டது. அதனால் தான் கோத்தபய ராஜபக்சே இது இந்திய போர் என்று சொன்னார்.

48 மணி நேரத்தில் போரை நிறுத்தினோம்
2002 ல் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் போது அங்கு நடந்த போரை நிறுத்த அமைச்சர் அனுப்பப்பட்டு 48 மணி நேரத்தில் நிறுத்திவிட்டு திரும்பினார்.

ராஜபக்சேவை வரவேற்பதில் என்ன தவறு...
கேள்வி அப்படிப்பட்ட ராஜபக்சேவை பா.ஜ.க சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது என்ற விமர்சனம் உள்ளதே?
ராஜா - ஒரு நாடு அனுமதி கொடுத்து அழைக்கும் போது அவரை வரவேற்பதில் என்ன தவறு இருக்கிறது.

அதிமுகவுடன் கூட்டணி சேருமா பாஜக
கேள்வி - தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அ.தி.மு.க பா.ஜ.கவுடன் கூட்டனி அமைக்கும் என்று பேசப்படுகிறதே..?
ராஜா - பாஜகவுக்கு 280 முதல் 300 வரை இடங்கள் கிடைக்கும். ஆனால் பத்திரிக்கைகள் தான் ஏதோ எழுதுகிறது. அதற்கு பதில் சொல்ல முடியாது என்றார் ராஜா.
தனி ஈழத்திற்கு ஆதரவில்லை, ராஜபக்சேவை வரவேற்பதில் தவறில்லை என்று கூறி விட்டார் பாஜகவின் ராஜா. என்ன பதில் சொல்லப் போகிறார்கள் கூட்டணியில் உள்ளவர்கள்...












Click it and Unblock the Notifications