ஐஎன்எக்ஸ் வழக்கின் முழுவிவரம்... கார்த்தி சிதம்பரத்தின் மீதான புகார் என்ன?
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கின் முழு விவரம் என்ன
Recommended Video
சென்னை : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரம் கைதுக்கு காரணமான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் முழு விவரங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
மோசடி, சட்டவிரோதமாக பணம் பெற்றது, அரசு ஊழியர்களை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கார்த்தி சிதம்பரம், பீட்டர், இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கார்த்தி சிதம்பரம், பீட்டர் - இந்திராணியின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் மூலம் பணம் பெற்றார் என்பதே இவர் மீது இருக்கும் குற்றச்சாட்டு.
தங்கள் நிறுவனம் மீது இருந்த வரிப் புகாரை சரிகட்டுவதற்காக பீட்டர் - இந்திராணி கார்த்தி சிதம்பரத்தின் செல்வாக்கை பயன்படுத்தியதாக சிபிஐ கூறுகிறது. மொரிஷியசில் இருந்து அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்கு கடுமையான நிபந்தனைகள் இருந்ததால் அதனை சட்டவிரோதமாக செய்வதற்காக பணத்தை கார்த்தி சிதம்பரம் ஆதாயமாக பெற்றார் என்பது வழக்கு.
பீட்டர் முகர்ஜி ஐஎன்எக்ஸ் கீழ் பல நிறுவனங்களைத் தொடங்கி அதன் நிர்வாகத்தை தனது மனைவி இந்திராணியிடம் அளித்துள்ளார். 2014ல் பீட்டர் ஐஎன்க்ஸ் நியூஸ் பிரைவேட் லிமிடெட், ஐஎன்எக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், ஐபிஎம் இன்கான் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஐஎன்எக்ஸ் சர்ச் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டவற்றை தொடங்கியுள்ளனர்.
2012ல் இந்திராணியும் பீட்டரும் ஐஎன்எக்ஸ் நியூஸ் பிரைவேட் லிமிடெட்டில் இருந்த பங்குகள் மொத்ததையும் விற்றுவிட்டனர். ஐஎன்எக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சிங்கப்பூர் அரசின் முதலீட்டு அமைப்பான டெமாசெக்கும் முதலீடு செய்திருந்தது. ஆனால் தனது சொந்த மகள் ஷீனா போராவை கொன்றுவிட்டு நாடகமாடியது குறித்த விசாரணை ஏப்ரல் 24,2014ல் நடைபெற்ற போது பீட்டரும் இந்திராணியும் ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் தொடர்ந்து நீடித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியும், பீட்டரும் சிறைத்தண்டனை பெற்றனர்.
2007ம்ஆண்டில் இந்திராணி ஐபிஎம் இன்கான் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தலைமையேற்று நடத்தியுள்ளார். மோசடிக்கான நுழைவுவாயில் இங்கு தான் அமைந்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் மூலம் ஐபிஎம் இன்கான் நிறுவனத்திற்கு ரூ. 10 கோடி கடனாக கொடுக்கப்பட்டுள்ளதை விசாரணை அமைப்புகள் கண்டறிந்தன.
2009ம் ஆண்டில் இந்திராணியும், பீட்டரும் சேர்ந்து ஐஎன்எக்ஸ் எக்சிக்யூட்டிவ் சர்ச் பிரைவேட் லிமிடெட்டை தொடங்கியுள்ளனர். அதே ஆண்டு பீட்டர் தன்னுடைய மனைவியின் நிறுவனத்தில் ரூ. 10 கோடி கடன் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்திராணி இந்த நிறுவனத்தின் 99.9% பங்குகளை வைத்திருந்தார், ஆனால் நிறுவனத்தின் மூலதன பங்கு ரூ. 10 கோடி என்ற அளவில் தான் இருந்தது.
ஐஎன்எக்ஸ் பங்குகள் மூலம் மற்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடனுக்கு வட்டியோ, திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசமோ இல்லை. ஒவ்வொரு நிறுவனத்தின் பங்குகளை வைத்து மற்ற நிறுவனத்திற்கு கடன் என்று கொடுத்ததோடு எந்த வர்த்தக விதிகளும் பின்பற்றப்படாமல் நஷ்ட கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.