செங்கல்பட்டில் இன்று திடீர் நில அதிர்வு.. காரணம் மிஜ்காம் புயல்? என்ன காரணம்.. அது எப்படி சாத்தியம்!
சென்னை: இன்று காலை செங்கல்பட்டு மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், இதற்கு என்ன காரணம் என்பதை பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் கணபதி விளக்கியுள்ளார்.
இன்று காலை செங்கல்பட்டு மகேந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் அருகே உள்ள அஞ்சூர், புளிப்பாக்கம், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மேலும், செங்கல்பட்டை அடுத்துள்ள ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடியிலும் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கிறது.

இது ரிக்டர் அளவில் 3.2ஆக பதிவான நிலையில், அங்கிருந்த பெரும்பாலான மக்களால் இதை உணரவே முடியவில்லை. இதற்கிடையே இந்த நில அதிர்வுக்கு என்ன காரணம் என்பதைப் பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் கணபதி விளக்கியுள்ளார்.
நில அதிர்வு: இது தொடர்பாகத் தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் லேசான மற்றும் மிதமான நில அதிர்வுகள் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இங்கே பெரியளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இதை intraplate earthquake என்று சொல்வோம். ஏற்கனவே கண்டங்களுக்கு அடியில் இருக்கும் நிலவெடிப்பு கோடுகள் சில நேரங்களில் நகரும். அது பூமிக்கு அடியில் நிகழும் வழக்கமான நிகழ்வுதான். இதன் காரணமாக நாம் அச்சப்படத் தேவையில்லை.
கடந்த 200 ஆண்டுகளில் தமிழகத்தில் பெரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் சான்றுகள் இல்லை. அதிகபட்சம் 5.6 ரிக்டரில் தான் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக 3 அல்லது 4 ரிக்டரில் தான் நில அதிர்வுகள் அதிகம் ஏற்படும். இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இடத்தில் கடந்த 200 ஆண்டுகளில் எந்தவொரு நிலநடுக்கமும் ஏற்பட்டதே இல்லை. அதேநேரம் இங்கிருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் வந்தவாசி பகுதியில் 1822இல் 5 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதுவும் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதுதான்.
என்ன காரணம்: இன்று கூட தமிழ்நாட்டில் மட்டும் நிலநடுக்கம் வரவில்லை.. அசாம், மேகாலயா, குஜராத் எனப் பல பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கிறது. மிக்ஜாம் புயல் காரணமாகக் கூட இந்த நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம். ஏனென்றால் கடந்த 5, 6 நாட்களாகத் தொடர் மழை பெய்து கொண்டிருந்தது.
அந்த தண்ணீர் உள்ளே புகுந்தும் கூட இந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இருப்பினும், இதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் நிச்சயம் தேவை. இது பொதுவான நிகழ்வு தான் அச்சப்படத் தேவையில்லை..
புயல்: மிக்ஜாம் புயல் தொடர் மழையைக் கொடுத்தால் பூமிக்கு அடியில் தண்ணீர் அதிகம் சென்றிருக்கும். அது கூட நிலநடுக்கத்தைத் தூண்டி இருக்கும். அதேநேரம் இதுதான் காரணம் என நான் சொல்லவில்லை. இதுவும் காரணமாக இருக்கலாம் என்றே சொல்கிறேன். மற்ற பேரிடர்களைப் போலப் பூமியை நம்மால் கணிக்க முடியாது. இதனால் இதுவரை தமிழ்நாட்டில் பெரிய பூகம்பம் வந்தது இல்லை. இதன் காரணமாகவே இனியும் வராது என்று சொல்ல முடியாது.
இதற்குப் பருவநிலை மாற்றம் மட்டும் காரணம் இல்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. பூகம்பங்களை நம்மால் துல்லியமாகக் கணிக்க முடியாது. அடுத்த பூகம்பம் எப்போது எங்கே ஏற்படும் என்பதை யாராலும் துல்லியமாகச் சொல்லவே முடியாது. உலகில் எந்தவொரு நாட்டிடமும் இதற்குத் துல்லியமான கணிப்புகள் இல்லை" என்று அவர் தெரிவித்தார்..












Click it and Unblock the Notifications