தமிழர்களுக்காக பிரதமராகும் வாய்ப்பை பல முறை தட்டிக்கழித்தவர் கருணாநிதி: நடிகை குஷ்பு
சேலம்: தமிழகத்தை விட்டால் வேறு எங்கும் செல்வாக்கே இல்லாத ஜெயலலிதா எப்படியாவது பிரதமர் ஆகிவிட வேண்டும் என்று கனவு காண்கிறார். அவரது பிரதமர் கனவின் நோக்கமே பெங்களூரு வழக்கை முடிப்பது தான் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களுக்கு விளக்கிக் கூறும் பொதுக் கூட்டம் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் தாதகாப்பட்டியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

காங்கிரஸால் ஏமாற்றம்
ஏற்காடு இடைத்தேர்தலில் மனசாட்சிப்படி திமுகவே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தங்களுக்கு தேவைப்படும்போது மட்டும் திமுகவை பயன்படுத்தியது. அந்த கட்சியினரால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். அதனால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். இதை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள்.

பிரச்சனைகள்
தமிழகத்தில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண முடியாத முதல்வர் ஜெயலலிதா நான் தான் அடுத்த பிரதமர் என்று கூறிக் கொண்டிருக்கிறார். உண்மையிலேயே தமிழர்களின் மீது அவருக்கு அக்கறை இருந்திருந்தால் சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டிருக்க மாட்டார்.

தமிழர்களின் தலைவர்
கருணாநிதி தான் தமிழர்களின் தலைவர் ஆவார். அட்டப்பாடி தமிழர்கள் பிரச்சனை முதல் ஈழம், சிங்கப்பூர் தமிழர்கள் பிரச்சனை வரை அனைத்திற்கும் முதலில் குரல் கொடுத்தவர் அவர் தான்.

பிரதமர் கனவு
கருணாநிதியை தேடி பிரதமர் ஆகும் வாய்ப்பு பல முறை வந்தது. ஆனால் அவர் தமிழர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்தே அந்த வாய்ப்புகளை தட்டிக் கழித்தார். ஆனால் தமிழகத்தை விட்டால் வேறு எங்கும் செல்வாக்கே இல்லாத ஜெயலலிதாவோ எப்படியாவது பிரதமர் ஆகிவிட வேண்டும் என்று கனவு காண்கிறார். அவரது பிரதமர் கனவின் நோக்கமே பெங்களூரு வழக்கை முடிப்பது தான்.

இரட்டை வேடம்
ஈழத் தமிழர்களின் நலனுக்காக தீர்மானம் நிறைவேற்றுகிறேன் என்று தெரிவித்த ஜெயலலிதா அந்த தீர்மானத்தில் இடப்பட்ட பேனா மை காய்வதற்குள் தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி தனது இரட்டை வேடத்தை காட்டினார் என்றார் குஷ்பு.












Click it and Unblock the Notifications