"ஒரே போன்.." அடுத்தடுத்து நடந்த சம்பவம்.. கரூரில் உண்மையில் நடந்தது என்ன.. செந்தில் பாலாஜி பரபர
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதற்கிடையே செய்தியாளரைச் சந்தித்த செந்தில் பாலாஜி, இந்த விசாரணையை நேர்மையாக எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 40 இடங்களில் சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
வருமான வரித்துறை சோதனை நடக்கும் நிலையில், கரூரில் சில இடங்களில் அதிகாரிகளை திமுகவினர் சுற்றி வளைத்தனர். மேலும், ஒரு அதிகாரியிடம் ஐடி கார்டையும் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
சோதனை:
இது மட்டுமின்றி வருமான வரித்துறையினர் வந்த கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்த முடியவில்லை என போலீஸ் நிலையத்திற்கே சென்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உரியப் பாதுகாப்பு வழங்கப்பட்ட மீண்டும் ரெய்டு தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை தொடங்கிய ரெய்டு தொடர்கிறது.

இதற்கிடையே போலீசார் பாதுகாப்பா தரத் தவறிவிட்டதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். திமுகவுக்கு ஆதரவாக போலீசார் நடந்து கொள்வதாகவும் இதனால் உள் துறை அமைச்சர் அமித் ஷா இதில் உடனடியாக தலையிட்டுப் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப் வீரர்களை அனுப்ப வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி:
அவர் பேசுகையில், "எனது வீட்டில் ரெய்டு நடக்கவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலேயே ரெய்டு நடத்தப்படுகிறது. அவர்கள் அனைவரும் ஏற்கனவே வருமான வரி செலுத்துவோர் தான். யாரும் வருமானத்தை மறைத்து வரி செலுத்தாமல் இருப்போர் இல்லை. இப்போது வரை 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டு முடிந்தவுடன் இது குறித்து விரிவாக விளக்கமளிக்கிறேன்.
இன்று சில இடங்களில் சில விரும்ப தகாத சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து உடனடியாக நான் கரூருக்குத் தொடர்பு கொண்டேன்.. திமுக நிர்வாகிகள் யாருமே சோதனை நடைபெறும் இடங்களில் இருக்கக் கூடாது. நாம் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனச் சொன்னேன். அதைத் தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த அனைவரும் கிளம்பிச் சென்றனர்.
எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அதற்கு ஒத்துழைப்பு தருவோம். என்ன ஆவணங்கள் கேட்டாலும் தரத் தயாராக இருக்கிறோம். இதை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.. எஸ்பி சொன்னது போலப் பாதுகாப்பு கோராமல் எப்படித் தர முடியும்.
ஒரே போன்கால்:
வருமான வரித்துறை சோதனையை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே போன்காலில் அனைவரையும் கிளம்ப வைத்துள்ளோம். ஆனால், அதிமுக எப்படி விசாரணையை எதிர்கொண்டது என அனைவருக்கும் தெரியும்.
தொண்டர்களை வரவழைத்து, சாப்பாட்டு வாங்கிக் கொடுத்து சாமியான பந்தல் எல்லாம் போட்டுத் தந்தார்கள். இதில் எது விசாரணையை நேரடியாக எதிர்கொள்ளும் முறை. நாங்கள் விசாரணையை நேர்மையாக எதிர்கொள்ளவே தயாராக இருக்கிறோம்" என்றார்.
மேலும், 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு அங்குல நிலம் கூட தனது பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். தற்போது புதிதாக வீடு கட்டப்படுவதாகச் சொன்ன இடம், தனது தம்பியின் மாமியார் தானமாக வழங்கிய இடம் என்றும் அவர் விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications