தேர்தல் முடிவுகள் "இந்தியா" கூட்டணிக்கு எதிராக வந்தால்? இதுவரை இல்லாத சிக்கலில் "காந்தி குடும்பம்"
சென்னை: ஒரு காலத்தில் இந்திய அரசியலில் சக்திவாய்ந்த சக்தியாக இருந்த நேரு-காந்தி வம்சம் இப்போது பெரும் சவால்களை எதிர்கொள்கிறது. மூன்று பிரதமர்களை உருவாக்கிய குடும்பம், பலவீனமான தலைமை மற்றும் குழப்பங்களை எதிர்கொண்டு வருகிறது. பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது காங்கிரஸ் தலைமை அளவில் சற்று பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஒருவேளை அது நடந்தால் காந்தி குடும்பத்தின் செல்வாக்கை அது கடுமையாக பாதிக்கும்.

டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ராகுல் வர்மா தி கார்டியன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி கூறுகையில், "மற்றொரு பெரிய தேர்தல் தோல்வி காங்கிரஸுக்குள் உள் கட்சி மோதலுக்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளார். இது கட்சியில் பெரிய பிளவை ஏற்படுத்தலாம். காந்தி குடும்பம் தங்கள் வம்சத்திற்கு வெளியே ஒரு நீண்ட கால தலைவரை இதுவரை தேடவில்லை. எனவே தோற்றால் அது காந்தி குடும்பத்தின் தோல்வியாகவே பார்க்கப்படும்.
2017ல் கட்சித் தலைவரான ராகுல் காந்தி, மோடியிடம் 2019 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் காங்கிரஸில் இப்போதும் அவர்தான் தலைவர் போல செயல்படுகிறார். பார்க்கப்படுகிறார். காங்கிரஸின் மிக பாதுகாப்பான தொகுதியான ரேபரேலி கூட ஆட்டம் கண்டுள்ளது. காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்தும் மக்களுக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
அஸ்திவாரம் ஆட்டம் கண்ட நிலையில், 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் இம்முறை போட்டியிடுகிறது. மோடி ஆட்சியை அகற்றினால் போதும் என்ற ஒரே கொள்கையோடு அவர்கள் சமரசம் செய்துள்ளனர். சமாதானங்கள் செய்து கொண்டுதான், காங்கிரஸ் எதிர்க்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
மோடி ஆட்சி தொடர்ந்தால் காங்கிரஸ் "முக்த் பாரத்" நிஜமாகிவிடும் என்ற அச்சத்தால் ராகுல் காந்தி இம்முறை கடும் ஆவேசத்தோடு பிரச்சார களத்தில் முன் நிற்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு மோடி ஆட்சியை அட்டாக் செய்கிறார். நாடு முழுக்க பெரிய பாத யாத்திரையை தனது மனோ மற்றும் உடல் திடத்தால் செய்து முடித்துள்ளார்.
இத்தனை முயற்சிகள் இருந்தபோதிலும், கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கணிசமான வெற்றியைப் பெற வாய்ப்பில்லை என்று கூறின. ராகுல் காந்தி பிரதமருக்கான மிகவும் நம்பத்தகுந்த வேட்பாளராகக் கருதப்படுகிறார், ஆனால் பலவீனமானவராக பார்க்கப்படுகிறார். மோடிக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு வட இந்திய மக்களிடையே ஈர்ப்பு இல்லாதவர் என்று விமர்சிக்கப்படுகிறார். எனவேதான் இந்திய அரசியலில் நேரு-காந்தி வம்சத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. இவ்வாறு கார்டியன் பத்திரிக்கை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications