எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பிரஷர் ஏற்றத்தான் பிரஷர் குக்கர் சின்னம்: டிடிவி தினகரன் தடாலடி
குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு தேர்தல் ஆணையத்திற்கு டி.டி.வி தினகரன் நன்றி தெரிவித்து உள்ளார்.
Recommended Video

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதற்கு தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகருக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களை பரிசீலித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

இதில் 59 பேர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆர்.கே நகரில் கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதனால், இந்த முறையும் தொப்பி சின்னத்திற்கு குறி வைத்த டி.டி.வி தினகரன் நீதிமன்றம் வரை சென்றும் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. மாறாக நமது கொங்கு முன்னேற்ற கழகம் என்கிற கட்சி வேட்பாளருக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
தொப்பி இல்லாவிட்டால் கிரிக்கெட் பேட், விசில் போன்ற சின்னங்களில் எதோ ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது தினகரன் அணி. ஆனால், குலுக்கல் முறையில் அந்த சின்னங்களும் வேறு சுயேச்சை வேட்பாளர்களுக்கு போய்விட, தற்போது தினகரனுக்கு ப்ரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
குக்கரை வைத்து என்ன செய்வார் தினகரன் என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்து இருக்கும் நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை வைத்து எனக்கு வெற்றி பெற தெரியும். துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் ப்ரஷர் கொடுக்கவே இந்த சின்னத்தை தேர்ந்தெடுப்பதாக கூலாக பதில் கூறினார்.












Click it and Unblock the Notifications