உளவுத் துறை உங்க கையில்தானே இருந்துச்சு.. என்ன செஞ்சீங்க.. வைகைச்செல்வன் கேள்வி
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக தற்போது கூறும் ஓ.பி.எஸ். உளவுத்துறையை தன் கட்டுப்பாட்டில்தானே வைத்திருந்தார். அப்போது என்ன செய்தார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கேட்டுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருந்திருந்தால் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உளவுத் துறையை வைத்து என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று ஓ.பன்னீர் செல்வத்துக்கு வைகைச் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாள்களுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. நாள்தோறும் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இல்லாத நிலையே தொடர்ந்து வருகிறது. மாறி மாறி அறிக்கை போர் தொடர்ந்து கொண்டுள்ளது.
தனக்கு சந்தேகம் இல்லை
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை நாட்டு மக்களுக்கு சந்தேகம் உள்ளது என்றும் அதை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை என்றும், அதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் தனது பதவியை ராஜிநாமா செய்த பிறகு கூறியிருந்த ஓ.பன்னீர் செல்வம், அதுபோன்ற ஒரு சந்தேகம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார்.
ஜெயலலிதா பிறந்த நாள்
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வந்த முதல் பிறந்தநாளை சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி ஆகியோர் போட்டிப் போட்டு கொண்டாடினர். அப்போது ஆர்.கே. நகர் தொகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும். அந்தக் குழுவானது மத்திய அரசின் கண்காணிப்பில் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஜனாதிபதியிடம் மனு
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் 11 பேர் மைத்ரேயன் தலைமையில் ஜனாதிபதியை டெல்லியில் சந்தித்து மனு கொடுத்தனர். அதற்கு ஜனாதிபதியும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
8-ஆம் தேதி உண்ணாவிரதம்
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வரும் 8-ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துளளனர். மேலும் இது குறித்து மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று ஓ.பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பி.எச்.பாண்டியன் குற்றச்சாட்டு
இந்நிலையில் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை தொடர்பாக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனும், அவரது மகன் மனோஜ் பாண்டியனும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதில் உலக தரம் வாய்ந்த அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள பிசியோதெரபிஸ்ட்டுகளை கொண்டு ஜெயலலிதாவுக்கு பயிற்சி அளிக்காமல் சிங்கப்பூரில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டது ஏன் என்றும், ஜெயலலிதாவின் மூச்சை நிறுத்த அனுமதித்தது யார் என்றும் கருப்புப் பூனை படையை திரும்ப பெற்றுக் கொள்ள அதிகாரம் அளித்தது யார் என்றும் சரமாரியாக கேள்வியை எழுப்பியுள்ளனர்.
கண்துடைப்பு நாடகம்
இதற்கிடையே, ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் மக்களை திசை திருப்பும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து வைகைச் செல்வன் கூறுகையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்த வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரது மரணம் குறித்து ஓ.பன்னீர் செல்வமும், அவரது அணியினரும் தான்தோன்றித்தனமாக, ஏனோ தானோ என்று மனதில் தோன்றும் கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து வருகின்றனர்.
அப்போது என்ன செய்தார்?
தற்போது நீதி வேண்டும், விசாரணை வேண்டும் என்று கூக்குரலிடும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் சிகிச்சைகளில் சந்தேகம் உள்ளது என்று கூறுவாரேயானால் அவர்தான் முதல் குற்றவாளி. ஏனெனில் அச்சமயம் உளவுத் துறையை கையில் வைத்திருந்தவர் அவர்தானே? அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஓபிஎஸ் தற்போது வெகுண்டெழுவது ஏன்? என்று வைகைச் செல்வன் கேள்வி எழுப்பினார்.