ஜெ. எங்கே?.. போயஸ் தோட்டத்திலா? ஹைதராபாத்திலா?... கேட்பது ஈ.வி.கே.எஸ்
சென்னை: ஜெயலலிதா, தனது முகத்தை மக்களிடம் காட்டாமல் இருப்பது ஏன், அவர் போயஸ்கார்டனில் இருக்கிறாரா, இல்லை ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்தில் இருக்கிறாரா என தெரியவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் அரசு இயந்திரம் செயல்படுகிறதா என்கிற சந்தேகம் எழுகிறது என்றார். மக்கள் பிரச்னைகளை கருத்தில் கொள்ளாமல் ஜெயலலிதா கோஷம் போடுவதிலேயே அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் நேரத்தை செலவிடுகின்றனர். இதுதொடர்ந்தால் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்" என்றும் அவர் கூறினார்.

எங்கிருக்கிறார் ஜெயலலிதா
ராகுல்காந்தி சில வாரங்கள் ஓய்விற்கு போன போது அவர் எங்கிருக்கிறார் என தேடினார்கள். ஆனால் முன்னால் முதல்வராகவும், தற்போது மீண்டும் முதல்வராக உள்ளதாக சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா, தனது முகத்தை மக்களிடம் காட்டாமல் இருப்பது ஏன், அவர் போயஸ்கார்டனில் இருக்கிறாரா, இல்லை ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்தில் இருக்கிறாரா என தெரியவில்லை. அவர் ஏன் வெளியே வந்து மக்களை சந்திக்க தயங்குகிறார்.
ரகசியம் காப்பது ஏன்?
அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைத்திருப்பது ஏன்..? கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர்களை ஜெயலலிதா சந்தித்தாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் வெளியே வரும்போது, முகம் சோகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. உள்ளே நடந்தது என்ன" என கேள்வி எழுப்பினார்.
பாஜக - அதிமுக கூட்டணி
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இளங்கோவன், " சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு தமிழகத்தில் பிஜேபி - அ.தி.மு.க. கூட்டணி உறுதியாகிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் ஊழலை ஒழிப்போம் என வார்த்தைக்கு வார்த்தை சொல்லிவந்த தமிழிசை செளந்தரராஜனும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தீர்ப்பு வெளியான பின் ஜெயலலிதா புகழ் பாடுவது.
விரைவில் தெரியவரும்
தீர்ப்பில் தண்டிக்கப்பட்டபோது ஜெயலிதாவை அருண்ஜெட்லி சந்தித்து பேசினார். இப்போது ஜெயலலிதா விடுலை செய்யப்பட்டுள்ளார். இந்த சந்திப்பில் பேசப்பட்டது விரைவில் அம்பலம் ஆகும்.
நீதியின் மீதான நம்பிக்கை
ஜெயலலிதாவின் தீர்ப்புக்கு பின்னர் ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என மக்கள் பேச ஆரமித்துவிட்டார்கள். மக்கள் மத்தியில் நீதிபதிகள், நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த வழக்கில் கர்நாடக அரசு நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்றார்.
மோடியின் செயல்பாடு
இதனையடுத்து மத்திய அரசு மீதான தாக்குதலை தொடங்கிய இளங்கோவன், "மோடி தலைமையிலான அரசு பதவியேற்று ஒருவருடமாக உள்ளது. ஆனால் செயல்பாடு பூஜியம். அவர்கள் செய்த ஒரே நல்ல காரியம் மீனவர்களின் பிரச்சினைக்கான மீனாகுமாரி அறிக்கையை தள்ளுபடி செய்தது மட்டுமே.
ஆணழகன் போட்டி
சீனாவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனி உடைகளை அணிந்து செல்வதைப்பார்த்தால் ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்று ஒரே போடாக போட்டு பேட்டியை முடித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.












Click it and Unblock the Notifications