உயிர்காக்கும் கருவியை நீக்க சம்மதித்த குடும்பத்தார் யார்? ஜெ.அண்ணன் மகள் தீபா கிடுக்கிப்பிடி கேள்வி
ஜெயலலிதா சிகிச்சைக்கு அவரது குடும்பத்தாரிடம் சம்மதம் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறித்து ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்ட உயிர்க்காக்கும் கருவியை நீக்க சம்மதம் தெரிவித்த குடும்பத்தார் யார் என ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் நாள்தோறும் சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. விளக்கமளிப்பபதாக வெளியிடப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசின் அறிக்கைகளும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் சந்தேகங்கள் அதிகரித்து வருகிறது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து அப்பல்லோ மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ அறிக்கைகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு அண்மையில் அறிக்கை வெளியிட்டது. அப்போது ஜெயலலிதாவின் குடும்பத்தாரின் சம்மதத்துடன்தான் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தீபாவும் கேள்வி எழுப்பியுள்ளார்
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க சம்மதம் தெரிவித்த குடும்பத்தார் யார்? உயிர்காக்கும் கருவியை நீக்க சம்மதித்த குடும்பத்தினர் யார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
யார் அந்த குடும்பத்தார்?
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை மேலும் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. சிகிச்சை பற்றி குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டு சம்மதம் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் யார் அந்த குடும்பத்தார்? என்று அரசு விளக்க வேண்டும்.
யாரிடம் சம்மதம் பெறப்பட்டது?
ஜெயலலிதாவுக்கு ரத்த சொந்தம் நானும் தீபக்கும் தான். என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. என்னை உள்ளேயே விடாமல் தடுத்துவிட்டனர். டிசம்பர் 5-ந் தேதி உயிர்காக்கும் உபகரணங்கள் நீக்கப்பட்டது ஏன்? யாரிடம் சம்மதம் பெறப்பட்டது? ஆவணங்களில் யார் கையெழுத்திட்டது?
ஓரிடத்தில் கூட பெயர் குறிப்பிட வில்லை
மருத்துவ நெறிமுறைகளின் அடிப்படையில் என்னிடமும், தீபக்கிடமும் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும். என்னிடம் எந்த ஒப்புதலும் பெறவில்லை. தீபக்கிடம் இருந்து சம்மதம் பெறப்பட்டிருந்தால் அந்த ஆவணங்களை அரசு வெளியிட வேண்டும். அரசு அறிக்கையில் குடும்பத்தார் யார் என்று ஓரிடத்தில் கூட பெயர் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு தீபா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.