சசிகலா புஷ்பா மீது புற்றீசலாய் புகார்கள்-இத்தனை நாளாக இவர்களின் வாய்கள் ஏன் திறக்கவே இல்லை?
சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது புகார் கூறுவது நாள்தோறும் அரங்கேறி வருகிறது...இப்படி புகார் மனுவைத் தூக்கிக் கொண்டு வருகிறவர்கள் இத்தனை நாட்களாக எங்கே இருந்தார்கள்? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
மேலும் சசிகலா புஷ்பாவை பழிவாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதும் மக்களுக்கு அப்பட்டமாக புரிய ஆரம்பித்து விட்டது. முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்தார் என ராஜ்யசபாவில் பேசி நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியவர் சசிகலா புஷ்பா. இதனால் அதிமுகவில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்யப்பட்டார் சசிகலா புஷ்பா.
பின்னர் ஜெயலலிதா மீது டெல்லி போலீசில் புகார் கொடுத்தார் சசிகலா புஷ்பா. அதே நேரத்தில் தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை சசிகலா புஷ்பா மீது வரிந்து கட்டிக் கொண்டு புகார்கள் கிளம்பின.

லஞ்சம் கொடுத்தேன்...
அதுவும் சசிகலா புஷ்பாவுக்கு லஞ்சமாக ரூ20 லட்சம் கொடுத்தேன் என்றெல்லாம் கூட பகிரங்கமாக ஒரு புகார்... அந்த லஞ்சப் பணம் ரூ20 லட்சத்தை மீட்டுத் தர கோரியும் ஒருவர் புகார் கொடுத்தார். தற்போது அந்த நபர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஏடாகூட புகார்....
இதேபோல் சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்ததாக கூறப்படும் பானுமதி, ஜான்சிராணி 2 பெண்களும் திடீரென தூத்துக்குடி எஸ்.பி.யிடம், ஏடாகூட புகார்களைக் கூறினர். அத்துடன் மீடியாக்களிடம் பேச வைக்கப்பட்டனர். இவர்களை அழைத்து வந்ததே ஒரு வழக்கறிஞர்தான்.

எங்கே இருந்தார்கள்?
இப்படி அப்பாவிகள் சிலரை 'ஆள்பிடித்து' கொண்டு திரைமறைவில் சில வழக்கறிஞர்கள் நாள்தோறும் ஒரு புகார் என கணக்குப் போட்டு ஊடகங்களுக்கு தீனியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்... சரி அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்..அதனால் புகார் கொடுக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இத்தனை நாளும் புகார் கொடுக்காமல் எங்கே போயிருந்தார்கள் என்பதுதான் பொதுமக்கள் கேள்வி.

என்னதான் வேண்டுமாம்?
சசிகலா புஷ்பா எம்.பி.யாக இருந்தவர்; அதனால் அவரை எதிர்த்து எப்படி புகார் கொடுக்க முடியும்? என்று கேட்பவர்களும் உண்டு... அமைச்சராக கோலோச்சியவர்கள் பெண்கள் விவகாரத்தில் சிக்கி ஆண்டியான கதையும் தமிழகத்தில் உண்டு... ஏன் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சிறைக்குப் போன அமைச்சரும் உண்டு... புகார்களில் உண்மையும் ஆதாரமும் இருந்தால் எவ்வளவு பெரிய அதிகார மையத்திடமும் தோற்கமாட்டார்கள் என்பது யதார்த்தம்... அப்படி இருக்கையில் புற்றீசல்கள் போல இந்த புகார்கள் கிளம்பி வருவதன் பின்னணி என்ன? இதன் மூலம் சசிகலா புஷ்பாவுக்கு என்ன நெருக்கடி கொடுக்க விரும்புகிறார்கள்?

ராஜினாமாவா?
ஒருவேளை சசிகலா புஷ்பா, அதிமுக எம்.பி. என்கிற பதவியை ராஜினாமா செய்துவிட்டால் இந்த 'புகார் நாடகங்கள்' முடிவுக்கு வந்துவிடுமோ என்னவோ? அதுவும் நடக்கலாம் என்பாதை மறுப்பதற்கில்லை
மொத்தத்தில் தமிழகத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு இப்போதைக்கு முடிவில்லை என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications