அழகிரியின் கலக குரலுக்கு பின்னால் இருப்பது யார்?
Recommended Video

சென்னை: நான்கு வருடங்களுக்கு மேலாக கட்சியிலிருந்து விலகி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி திடீரென திமுகவில் தனக்குத்தான் செல்வாக்கு அதிகம் உள்ளது என்று அளித்துள்ள பேட்டி, யாருடைய குரல் என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் மறைந்தது தொடர்ந்து 2017 பிப்ரவரி மாதம், அதிமுகவுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினார் பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா மரணத்திற்கு, நியாயம் கேட்கும் தர்ம யுத்தம் என்ற பெயரில் அவர் நடத்திய கிளர்ச்சியினால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவியது.

ஜெயலலிதா கொள்கைகள்
சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. இதன் பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து ஆட்சி நடத்தி வருகிறார்கள். இருப்பினும் ஜெயலலிதா இருந்தபோது எடுத்த மத்திய அரசுக்கு எதிரான பல நிலைப்பாடுகள் பின்னர் தமிழக அரசால் தளர்த்திக் கொள்ளப்பட்டது. இது, விமர்சனங்களுக்கு உள்ளானது.

மோடி தலையீடு
ஓ.பன்னீர்செல்வம் ஒருமுறை அளித்த பேட்டியின் போது, அதிமுக பிளவுகளை சரிசெய்து இணையுமாறு தன்னிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக பகிரங்கமாக அறிவித்தார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு இருப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளுக்கு பன்னீர்செல்வத்தின் பேட்டி வலு சேர்த்துவிட்டது.

திமுகவில் தர்மயுத்தம்
இந்த நிலையில் அழகிரி இன்று அளித்துள்ள பேட்டி, திமுகவில் ஒரு தர்ம யுத்தம் என்று மீடியாக்களால் வர்ணிக்கப்படுகிறது. அதிமுக பலவீனப்பட்டது போல, திமுக தலைவரின் மறைவுக்குப் பிறகு எந்த கட்சி எந்த வகையிலும் பலவீனப்படவில்லை. ஆனால் திமுக பலவீனப்பட வேண்டும் என்று விரும்புவது யார்? அழகிரியின் குரலுக்கு பின்னால் இருப்பது யார்? என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

ஸ்டாலினை சுட்டி காட்டிய கருணாநிதி
கருணாநிதி தனது கடைசி மூச்சு வரை ஸ்டாலினை மட்டுமே பெரிதாக நம்பினார். பொது மேடையிலும் கூட தனது அரசியல் வாரிசு ஸ்டாலின் என்றும், திமுக கட்சியை வழிநடத்த போவது அவர்தான் என்றும் அறிவித்து விட்டார். இருப்பினும் இப்போது தேவையற்ற வகையில் அழகிரி குழப்பம் ஏற்படுத்துகிறார். அதற்கு அவர் பயன்படுத்தும் பெயர், ரஜினிகாந்த். இதே பெயர் தான் அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது இதில் கவனிக்கத்தக்க அம்சம்.

எங்கும் ரஜினிகாந்த் பெயர்
ஆம், கடந்த பல நாட்களாகவே அதிமுகவின் வாக்கு வங்கியை ரஜினிகாந்த் ஈர்க்க வாய்ப்புள்ளது என்ற ஒரு கருத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. அதிமுக தலைமைக்கு ரஜினிகாந்த் வர உள்ளார் என்றும் யூகங்கள் பரவி வருகிறது. மத்திய அரசுடன் நல்ல உறவை பேணி வரும், தமிழக அமைச்சர் பாண்டியராஜன் கூட, ரஜினிகாந்த் எங்கள் கட்சிக்கு வந்து சேரக் கூடும் என்று தெரிவித்தார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே, ரஜினிகாந்த் பெயர் திமுகவில் குழப்பம் ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

பின்னணி குரல்
திமுக உண்மை விசுவாசிகள் தன்பக்கம் இருப்பதாகவும், திமுக தலைவர்கள் ரஜினியுடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் இரு வேறு கருத்துக்களை கூறி ஸ்டாலினின் தலைமையை மிக பலவீனமாக சித்தரிக்கிறார் அழகிரி. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தி மு க கட்சிக்குத்தான் பாதகம். திமுக பலவீனத்தை விரும்புவது யார்? தமிழகத்தில் இரு திராவிட கழகங்களும் பலவீனப்பட வேண்டும் என்று விரும்புவது யார்? சசிகலாவோ, ஸ்டாலினோ தலைமையில் இருந்தால், தாங்கள் ஆட்டுவித்தபடி ஆட மாட்டார்கள் என்று நினைப்பது யார்? அழகிரியின் குரலுக்கு பின்னால் இருப்பதும் 'அவர்கள் தான்' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications