எம்ஜிஆரின் அதிமுகவை வழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் "தகுதி" என்ன தெரியுமா?
அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் சசிகலாவின் அக்காள் மகன் கடந்த 5 ஆண்டு காலம் கட்சியை விட்டு ஒதுங்கியிருந்தவர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு விரட்டப்பட்ட டிடிவி தினகரன், நேற்று ஒரே நாளில் கட்சியில் சேர்க்கப்பட்டு துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த டிடிவி தினகரன், அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியை வழிநடத்த இவர் தகுதியானவர்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் டி.டி.வி. என அ.தி.மு.கவினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர் தினகரன். சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன். இவருக்கு பாஸ்கரன், சுதாகரன் ஆகிய இரண்டு தம்பிகள் உள்ளனர்.
டிடிவி தினகரன்
பிறந்த ஊரான திருத்துறைப்பூண்டியையும் அப்பா விவேகானந்தன் பெயரையும் இணைத்து, டி.டி.வி.தினகரன் என மாறினார். மாமன் மகள் அனுராதாவை, ஜெயலலிதாவின் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவரது மனைவி அனுராதா ஜெயாடிவியை நிர்வாகம் செய்தார்.
அதிமுக பொருளாளர்
தேர்தல் சுற்றுப்பயணக் காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பாளராக போயஸ்தோட்டத்திற்குள் நுழைந்தார். செல்லப்பிள்ளையாக வலம் வந்தார். அதிமுகவின் மிக முக்கிய பதவியான பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டது.
டெல்லிக்கு போன தினகரன்
1999ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தினகரனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தோல்வியைத் தழுவினார், இதனையடுத்து ராஜ்யசபா எம்.பியாக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பெரியகுளம் மக்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்பட்டார்.
துரோகி முத்திரை
2011ல் கட்சியில் இருந்து சசிகலா உறவினர்கள் அத்தனை பேரையும் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கியபோது தினகரனும் தப்பவில்லை. அதன்பின் அரசியலில் இருந்து முற்றிலும் விலகியே இருந்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை போயஸ்கார்டன் பக்கம்கூட அவர் வரவில்லை.
மோசடி வழக்கு
1998ம் ஆண்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை பெற்ற புகாரின் பேரில் அமலாக்கத் துறையால் தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அது 28 கோடியாக குறைக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம்
கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா அப்போது மீண்டும் நேரடி அரசியலுக்கு வந்தார் டிடிவி தினகரன். ஆட்சி அமைக்க ஆளுநரை சசிகலா சந்தித்தபோதும், பின் எடப்பாடி பழனிச்சாமி சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும் அவர்களுடன் டிடிவி தினகரன்தான் அருகில் நின்று கொண்டிருந்தார்.
துணை பொதுச்செயலாளர் பதவி
ஜெயலலிதாவினால் விரட்டப்பட்ட டிடிவி தினகரன், கட்சியில் அடிப்படை உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில், அவர் துணை பொதுச் செயலளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியை வழிநடத்த இருக்கும் தினகரன் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.