புதுக்கோட்டை கம்பன் கழக விழா.. அழைப்பிதழில் ஆளுநர் ஆர்.என்.ரவி பெயர் திடீர் நீக்கம்.. பின்னணி என்ன?
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கம்பன் விழாவின் நிறைவு நாளான ஜூலை 23 இல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்வதாக இருந்த நிலையில் அவரது பெயர் அழைப்பிதழில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன தெரியுமா?
புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவராக திமுக பிரமுகர் முத்துப்பட்டினம் மணல் ராமசந்திரன் உள்ளார். இந்த ஆண்டுக்கான கம்பன் கழக விழா ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான அழைப்பிதழை கம்பன் கழக நிர்வாகிகள் புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ முத்துராஜா மூலம் வெளியிடச் செய்தனர். அழைப்பிதழ் வெளியான நிலையில் மாவட்டம் முழுவதிலும் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த விழாவில் அமெரிக்க துணை அமைச்சர் ராஜன் நடராஜன், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், எம்பிக்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், திருமாவளவன், அப்துல்லா, எம்எல்ஏக்கள் கந்தர்வக்கோட்டை சின்னத்துரை, புதுக்கோட்டை முத்துராஜா, விராலிமலை விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறாவு நாளான 23 ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார் என அந்த அழைப்பிதழில் இருந்ததற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசே ஆளுநருக்கு எதிராக இருக்கும் போது ஆளுநரை அழைக்கும் விழா அழைப்பிதழை ஆளும் திமுக எம்எல்ஏவை வைத்தே வெளியிட்டுள்ளார்கள்.
ஆளுநர் வந்தால் கருப்பு கொடி காட்டுவோம் என திமுக, கம்யூனிஸ்ட்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆளுநர் கலந்து கொள்ளும் இந்த விழாவை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்திருந்தனர்.
நாளுக்கு நாள் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் அந்த அழைப்பிதழில் இருந்து ஆளுநரின் பெயர் நீக்கப்பட்டு புதிய அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகை இருந்த நிலையில் அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துவிட்டு அதைநிறுத்தி வைத்ததாக அறிவித்த ஆளுநரின் நடவடிக்கைக்கு பிறகு இந்த மோதல் போக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக புதுக்கோட்டையில் நகரம் முழுவதும் போஸ்டர்கள் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் எங்கள் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய நீ யார், என்று ஆளுநர் புகைப்படத்தை போட்டு கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும் மத்திய அரசில் குற்ற பின்னணியில் உள்ள அமைச்சர்களின் புகைப்படங்கள், பெயர்கள், அவர்களுடைய குற்றப்பின்னணி அடங்கிய விவரங்களும் அந்த சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளன. முதலில் டெல்லி சென்று இந்த மத்திய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறு என ஆளுநரை ஒருமையில் பேசி போஸ்டர் அடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications