எங்கே போனது 'அந்த' வேகம்? ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் மௌனம் களைவார்களா?
சென்னை: அதிமுவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்ட போதும் சரி அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையின் போதும் சரி டுவிட்டரில் படு தீவிரமாக செயல்பட்டு வந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், ஆனால் அனிதா தற்கொலை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்ற கேள்வி மக்கள் மனதை துளைத்து எடுக்கிறது.
+2வில் நல்ல மதிப்பெண் எடுத்தும், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்தப்பட்டதால், மன நெருக்கடிக்குள்ளாகி அனிதா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அனிதாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பல தலைவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அதிமுகவிலிருந்து வெளியேறி தனி அணியாக செயல்பட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இருவரும் இதுவரை அனிதாவின் மரணம் குறித்து ஏன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏன் கருத்து கூறவில்லை?
அனிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 7 லட்சரூபாய் ரொக்கமும், ஒருவருக்கு வேலை தருவதாக அறிவித்துள்ளார். ஆனால்,அணிகள் தனியாக செயல்பட்ட போதும், அணிகள் இணைந்த தருணத்திலும், அதிவேகமாக தங்களது கருத்துக்களை டிவிட்டரில் பகிர்ந்துவந்த ஓபிஎஸ்ஸும், பாண்டியராஜனும் அனிதா விவகாரத்தில் இன்னும் சில வரிகள் கூட பதியவில்லை என்பதை கவனிக்க முடிகிறது. தாங்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளை பற்றிதான் டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

தீர்ப்பால் அமைதியாகிப் போனது
நீர் தேர்வு விலக்கு கிடைத்துவிடும் என்று கடைசி நிமிடம் வரை மத்திய, மாநில அரசுகள் உறுதி தந்துவந்தன. ஆனால் இறுதி நாட்களில் நீட் நுழைவுத்தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதால், அதை அரசியல்கட்சிகளோ, அமைப்புகளோ, அரசியல்வாதிகளோ பெரிய அளவில் எதிர்க்கவில்லை. ஆனால், அனிதாவின் மரணம் அந்த அமைதியை போக்கி, நீட் விவகாரத்தை விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது.

என்ன செய்யப் போகிறார் ஓ.பன்னீர்செல்வம்?
மக்கள் பிரச்னைக்காகவே அதிமுக அணிகள் இணைகின்றன என்று காரணம் சொல்லியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அணிகள் இணைந்த பின்னர் எந்த எதிர் கருத்தையும் சொல்லாமல் நல்லாட்சியில் நடப்பதாக ஆணித்தரமாக சொல்லி வருகிறார்.அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில் மக்களுக்காக போராடுவதாக கூறி வந்த அவர்கள் எடுக்கப் போகும் முடிவில் தான் அவர்களின் அரசியல் பொதுவாழ்வும் அடங்கி இருக்கிறது.

எதிர்மறை கருத்துகள்
அதேபோல், ஓ.பி.எஸ்ஸின் முகாமில் இருந்து தீவிரமாக டிவிட்டரில் செயல்பட்டுவந்த சிலர் தற்போது அனிதாவின் மரணத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதையும் கவனிக்கமுடிகிறது. குறிப்பாக, வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்த நிதி எங்கிருந்து கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பினார்கள். இதை ஓபிஎஸ் கண்டிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பயனில்லை
அனிதாவின் மரணம், தமிழக அரசியல் களத்தில் சூறாவளியை கிளப்பியுள்ள நிலையில், அதிமுகவினரும், ஆதரவு டிவிட்டர் கணக்குகளிலும் மாணவியின் மரணத்தை கொச்சப்படுத்துவதை பலர் கண்டித்தும் வருகிறார்கள். அனிதாவின் மரணத்திலிருந்தாவது பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் அதைவிடுத்து, கடுமையான தாக்குதல்களை புதுத்துவதால் பயனில்லை என்றும் சமூக நோக்கர்கள் வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications