பூனை கண்ணை மூடிவிட்டால் பூலோகம் இருண்டு விடுமா மிஸ்டர் தினகரன்?
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை ஓ.பன்னீர் செல்வம் தோண்டியெடுக்க முயன்றதால் நடுங்கி போன தினகரன் செய்த காரியம் பூனை கண்ணை மூடிவிட்டால் பூலோகம் இருண்டு விடும் என்பது போல் உள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரியதால் பயந்து போன தினகரன், அவரை அரசு இல்லத்தில் இருந்து காலி செய்ய வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். இதன் மூலம் பூனை கண்ணை மூடிவிட்டால் பூலோகமே இருண்டு விடும் என்று தப்புக்கணக்கு போட்டுள்ளார் தினகரன்.
பசுமைவழிச் சாலை எனப்படும் கிரீன்வேஸ் சாலையில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஓ.பன்னீர் செல்வத்துக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டு அங்கு நீண்ட நாள்களாக அவர் தங்கி வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவை முதல்வராக்க நிர்பந்தப்படுத்தியதால் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப். 5-ந் தேதி அப்பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், முதலில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் அவரது அணியைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் மைத்ரேயன் தலைமையில் ஜனாதிபதியிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அரசு இல்லத்தை காலி செய்ய..
எவ்வித பதவியும் வகித்தாத நிலையில் தாம் அரசு இல்லத்தில் தங்கக் கூடாது என்று நன்கு உணர்ந்த ஓபிஎஸ் வீடு தேடும் படலத்தை தொடங்கினார். வாஸ்து, அது ,இது என்று வீடு பிடித்திருந்தாலும் பல காரணங்களால் அந்த வீட்டை நிராகரித்தார் ஓபிஎஸ். இப்படியே ஒரு மாத காலம் ஆயிற்று.

புகைச்சல் அடைந்த தினகரன்
பதவியில் ஏதும் இல்லாமல் அரசு இல்லத்தில் தங்கியிருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை அங்கிருந்து காலி செய்யுய நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசை நிர்பந்தித்தார் தினகரன். எனினும் அதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டு கொள்ளவில்லை.

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
ஜெ்யலலிதாவின் மரணம் தொடர்பான நீதி விசாரணை கேட்டு தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கடந்த 8-ந் தேதி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு சேர்ந்த மக்கள் கூட்டத்தாலும், அவர் பிட்டு பிட்டு வைத்த சில உண்மைகளாலும் அதிர்ந்தார் தினகரன்.

பொதுப்பணித் துறை நோட்டீஸ்
உண்ணாவிரதப் போராட்டத்தால் ஆடிப்போன தினகரன், அரசு இல்லத்தில் உட்கார்ந்து கொண்டு அரசுக்கு எதிராக ஓபிஎஸ் செயல்படுகிறார் என்று முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். விளைவு, அரசு இல்லத்தை காலி செய்யுமாறு பொதுப் பணித் துறையினர் ஓ.பன்னீர் செல்வத்திடம் நோட்டீஸ் அளித்தனர்.

வீனஸ் காலனியில்...
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே பார்த்து வைத்த வீடுகளில் ஒன்றான ஆழ்வார்பேட்டையில் உள்ள வீனஸ் காலனிக்கு குடிபெயர்ந்தார். பூனையின் கண்ணை மூடிவிட்டால் பூலோகமே அழிந்து விடும் என்று இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான காரியங்களில் தினகரன் ஈடுபடுகிறார். இது சசி அணியினரையே முகம் சுளிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications