மாமனாருடன் சேர்ந்து கணவரைக் கொன்று வீட்டு முன் புதைத்த பெண் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாமனாருடன் சேர்ந்து கணவரைக் கொன்றார் ஒரு பெண். பின்னர் பிணத்தை வீட்டின் முன்பே புதைத்து விட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி கும்மனூரை
சேர்ந்தவர் தேவன். 58 வயதான இவரது மகன் கேசவன். இவருக்கு 35 வயது. கேசவனின் மனைவி பெயர் சங்கீதா. 31 வயதான இவருக்கும், கேசவனுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கேசவனைக் காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் கொடுத்தார் தேவன். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சங்கீதா தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார்.
இந்த நிலையில் கேசவன் வீட்டின் முன்பு சத்தம் போட்டுக் குரைத்தபடி சில நாய்கள் மண்ணைப் போட்டுத் தோண்டியுள்ளன. மேலும் துர்நாற்றமும் வந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வருவதாக தெரியவில்லை. இதையடுத்து மக்களே தோண்ட ஆரம்பித்தனர். அப்போது அங்கு ஒரு பிணம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
மீண்டும் போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் வந்தனர். சங்கீதாவை அழைத்து விசாரித்தனர். அவர் உண்மையைக் கக்கினார். அதாவது பிணமாகக் கிடந்தது கேசவன்தான். அவரைக் கொன்றது சங்கீதா. இதற்கு மாமனார் தேவன் உடந்தை.
இதுகுறித்து சங்கீதா கூறுகையில், தினமும் குடித்து விட்டு தன்னை கணவர் அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் மாமனாருடன் சேர்ந்து கணவரை அடித்து கொன்று வீட்டின் முன்புறம் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சங்கீதாவை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்னும் தேவன் கைது செய்யப்படவில்லை. கொலைக்கான காரணமாக சங்கீதா ஒன்றைக் கூறினாலும் கூட வேறு காரணம் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் சங்கீதாவையும், தேவனையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.