மிஸ்ட் கால்.. கள்ளக்காதல்.. கணவர் எதிர்ப்பு.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்து அறுப்பு... மனைவி கைது
தர்மபுரி: தர்மபுரி மாட்டம் அரூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்று கைதாகியுள்ளார் ஒரு பெண்.
அரூர், குடுமியாபட்டியைச் சேர்ந்தவர் ரஜினி. 37 வயதான இவர் விவசாய கூலித் தொழிலாளர் ஆவார். இவரது மனைவி பெயர் சங்கீதா. 30 வயதான இவருக்கும், பிரபாகரன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. பிரபாகரன் திருச்சியைச் சேர்ந்தவர். ஒரு முறை பிரபாகரன் போட்ட மிஸ்ட் கால் சங்கீதாவுக்கு வந்து விட்டது. அதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கமாகி கள்ளக் காதலாக மலர்ந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து உறவை வளர்த்துள்ளனர்.

அடிக்கடி சங்கீதாவைப் பார்க்க கிளம்பி வந்து விடுவாராம் பிரபாகரன். இருவரும் தனிமையில் சந்திப்பது வழக்கமாகியுள்ளது. இது ரஜினி காதுக்கு வர அவர் கொதிப்படைந்தார். மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் அதை சங்கீதா கண்டுகொள்ளவில்லை. அதேசமயம், ரஜினி உயிருடன் இருக்கும் வரை தனது மகிழ்ச்சிக்கு சிக்கல்தான் என்று முடிவு செய்த அவர் பிரபாகரனிடம் இதுகுறித்துப் பேசியுள்ளார். இருவரும் சேர்ந்து ரஜினியைக் கொலை செய்ய முடிவு செய்தனர்.
ரஜினிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதைப் பயன்படுத்தி மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் சங்கீதா. ஆனால் ரஜினி அதிலிருந்து தப்பி விட்டார். இதையடுத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முடிவெடுத்தனர். ஜூன் 1ம் தேதி ரஜினி மது அருந்தி விட்டு மயங்கிய நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபாகரன், சங்கீதாவின் துணையுடன் ரஜினியின் கழுத்தை பேனா கத்தியால் அறுத்துள்ளார். ஆனால் ரஜினி சுதாரித்து கத்திக் கூச்சலிட்டார்.
இதைப் பார்த்து பயந்து போன சங்கீதாவும், பிரபாகரனும் அங்கிருந்து ஓடி விட்டனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் ரஜினி உயிர் தப்பினார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் தலைமறைவான சங்கீதாவையும், பிரபாகரனையும் தற்போது கைது செய்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications