களியக்காவிளை அருகே கணவனை கொல்ல முயன்ற மனைவி.. பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு!
கணவனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி: களியக்காவிளை அருகே தூங்கி கொண்டிருந்த கணவனை கம்பியால் தாக்கியும் கத்தியால் அறுத்தும் கொலை செய்ய முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை மரியகிரி பகுதியை சேர்ந்தவர் ஓட்டுனர் சர்ஜின். இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த பிபிதா என்ற பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து உள்ளார். இவர்கள் மரியகிரியில் சர்ஜினின் தாய் வீட்டில் வசித்து வந்து உள்ளனர். சர்ஜினுக்கு பல பெண்களுடன் கள்ள தொடர்பு இருப்பதாக பிபிதாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதனால், கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகராறும் ஏற்பட்டு வந்து உள்ளது.
இந்த நிலையில் சர்ஜினின் ஐந்தரை வயது மகளுடன் சர்ஜினின் தாயார் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உறவினர் கிரபிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். நேற்றிரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சர்ஜின் தூங்க சென்றுவிட்டார். ஆத்திரம் அடங்காத பிபிதா, சர்ஜின் படுத்து உறங்குவதை பார்த்து கம்பியால் தலையில் இரண்டு முறை கடுமையாக தாக்கினார். அத்துடன் நிற்காமல், கத்தியால் சர்ஜினின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.
ஆனால் சர்ஜின் இரும்பு கம்யில் அடித்ததும் வலி தாங்காமல் அலறினார். இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சர்ஜின் கூச்சலிடுவதை கண்டதும் பிபிதா, வெளியில் சென்று வீட்டுக்கதவுகளை பூட்டி விட்டு தப்பி செல்ல முயன்றார். அப்போது, பொதுமக்கள் பிபிதாவை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் கதவை உடைத்து உயிருக்கு போராடி கொண்டீருந்த சர்ஜினை மீட்டு கேரள மாநிலம் பாறசாலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து களியக்காவிளை காவல்நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசாரிடம் பிபிதாவை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பிபிதாவை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு செய்தி சேகரித்து கொண்டிருந்த செய்தியாளர்கள் முன்னிலையிலேயே கணவனை இரும்பு கம்பியால் கொலை செய்ய முயன்றதாக பிபிதா பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து தொடர் விசாரணை அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.