கை மாறிவிட்டதா அதிமுக..?? என்ன சொல்கிறது விக்கிபீடியா??
சென்னை: விக்கிப்பீடியாவில் அதிமுக தலைவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் பிரசிடன்ட் எடப்பாடி கே.பழனிச்சாமி என்றும் பதிவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக இரண்டாக உடைந்து முடக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் என நேற்றிரவு மாற்றப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தன்னை நியமித்துக் கொண்ட சசிகலா கட்சியை கைப்பற்றிய கையோடு ஆட்சியையும் கைப்பற்ற முயன்றார். இதற்கு ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கவே கட்சியில் பிளவு ஏற்பட்டு இரண்டாக உடைந்தது.
இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரவே சிறை சென்றார் சசிகலா. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக கட்சி தன் குடும்பத்தின் பிடியில்தான் இருக்க வேண்டும் என திட்டம் தீட்டிய அவர், துணைப் பொதுச்செயலாளராக தனது அக்காள் மகன் தினகரனை நியமித்தார்.
சின்னம் முடக்கம் - கைது
இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரவே ஒபிஎஸ் கோஷ்டியும் சசிகலா கோஷ்டியும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டன. இதைத்தொடர்ந்து இரட்டை இலையை முடக்கியது தேர்தல் ஆணையம். கட்சிப்பெயரையும் கொடியையும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. இரட்டை இலைச் சின்னத்தை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்று எண்ணிய டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிக்க முயன்றார். இந்த விஷயம் வெளியில் வரவே அவரை டெல்லி போலீஸ் கைது செய்தது.
மன்னார்குடி கும்பல் நீக்கம்
இந்நிலையில் இரட்டை இலைச்சின்னத்தை காப்பாற்றும் நோக்கில் இரு அணிகளும் இணையும் முயற்சிகிள் எடுக்கப்பட்டு வருகின்றன. சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கினால் தான் பேச்சுவார்த்தை என நிபந்தனை விதித்துள்ள ஓபிஎஸ் தரப்பு கட்சி மன்னார்குடி கோஷ்டியிடம் இருந்து காப்பாற்றபட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. சசிகலா குடும்பத்தின் தலையீடு காரணமாக இரு அணிகளும் பேச்சு வார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதில் இழுபறி நிலவி வருகிறது.
அதிமுக தலைவர் ஓபிஎஸ்
இந்நிலையில் தேடும் தகல்வகளை தரும் விக்கிப்பிடியாவில் அதிமுக குறித்த தகவல்கள் புதிதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதாவது அதிமுக தலைவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் பிரெசிடன்ட் மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
நள்ளிரவில் மாற்றம்
அதிமுக லோக் சபா தலைவர் தம்பிதுரை என்றும் ராஜ்ய சபா தலைவர் நவநீதகிருஷ்ணன் என்றும் நிறுவனர் எம்ஜி ராமச்சந்திரன் என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நள்ளிரவு ஒரு மணியளவில் செய்யப்பட்டுள்ளன.
யார் பார்த்த வேலை
இந்த வேலையை யார் பார்த்தது என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகாத நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பதிவிடப்பட்டுள்ளது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் வேண்டுமானாலும்
விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் மாற்றங்களை செய்ய முடியும். அட்மினாக இருப்பவர்கள் அதை திருத்தவோ, நீக்கவோ முடியும். ஆகையால் ஆதரவாளர்கள் தாங்கள் விரும்பும் தலைமைகளின் பெயர்களை போடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.