சட்டசபை காங். தலைவரைத் தேர்வு செய்யப் போவது "அவங்களாமே"... !
சென்னை: தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி யாருக்கு என்பதில் இன்னும் தெளிவு இல்லை. முன்னாள் கொறடா விஜயதாரணிக்கும், நாங்குநேரி எம்.எல்.ஏ வசந்தகுமாருக்கும் இடையே இதில் கடும் போட்டி நிலவினாலும் கூட இவர்களைத் தாண்டி காரைக்குடியில் வெற்றி பெற்றுள்ள மூத்த தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கே தலைவர் பதவி கிடைக்கும் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.
சட்டசபைத் தேர்தல் முடிந்த கையோடு சட்டசபை கட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸில் அடிதடி ஆரம்பித்துள்ளது. கடந்த சட்டசபையில் கொறடா பதவி வகித்த விஜயதாரணிக்கும், வசந்த் அன் கோ வசந்தகுமாருக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.
வசந்தகுமாருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. விஜயதாரணியும் தன் பங்குக்கு லாபி செய்து வருகிறார்.

41ஐ வாங்கி 8ல் வெற்றி
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவிடம் 41 தொகுதிகளை அடம் பிடித்துக் கேட்டு வாங்கி சிங்கிள் டிஜிட்டில் மட்டுமே வென்றுள்ளது காங்கிரஸ். வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இருப்பினும் கடந்த சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை கூடுதலாக 3 இடங்களில் வென்றுள்ளது. அந்த வகையில் காங்கிரஸுக்கு இது லாபம்தான்.

யார் யார்?
நாங்குநேரியில் வசந்தகுமார், குளச்சல் தொகுதியில் பிரின்ஸ், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி, கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ் குமார், ஊட்டியில் கணேஷ், தாராபுரம் தனித் தொகுதியில் காளிமுத்து, முதுகுளத்தூர் தொகுதியில் பாண்டி, காரைக்குடி தொகுதியில் கே.ஆர்.ராமசாமி அம்பலம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

யாருக்குத் தலைவர் பதவி?
இதில் விஜயதாரணி, வசந்தகுமார் ஆகியோர்தான் தலைவர் பதவியைப் பிடிக்க கடுமையாக மோதி வருகின்றனர். அதேசமயம், சத்தம் இல்லாமல் இன்னொரு வேலையும் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து வருகிறதாம். ஆனால் இந்த வேலையைச் செய்வது ஆளுங் கட்சி என்கிறார்கள்.

ராமசாமியைத் தலைவராக்க
ஆளுங்கட்சிக்கு ஆதரவான இந்த குரூப் கே.ஆர். ராமசாமியை சட்டசபை கட்சித் தலைவர் பதவியில் அமர்த்த முயலுகிறதாம். இவர்கள் மன்னார்குடி வகையறாவின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த வேலையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

சாதகமாக இருப்பார்
மன்னார்குடி வகையறாவுடன் நெருக்கமானவர் ராமசாமி. முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். அனைவரிடமும் பாகுபாடு பார்க்காமல் பழகக் கூடியவர். ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்ற போதிலும் கூட ப.சிதம்பரத்தின் எதிர்த் தரப்புடனும் நட்பு பாராட்டுபவர். எனவே சட்டசபையில் காங்கிரஸை டீல் செய்ய வசந்தகுமார், விஜயதாரணியை விட ராமசாமி சாதகமாக இருப்பார் என்று கணக்குப் போடுகிறது மன்னார்குடி தரப்பு.

ராமசாமிக்கு லாபி
எனவே தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராமசாமி வருவதற்கு, காங்கிரஸுக்குள் இருக்கும் தனது ஆதரவு வட்டம் மூலமாக இவர்கள் லாபி செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

கரியமாணிக்கம் அம்பலத்தின் மகன்
ராமசாமி பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கரியமாணிக்கம் அம்பலம், பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப் பிரபலமான காங்கிரஸ் தலைவர். நீண்ட நெடிய காங்கிரஸ் பாரம்பரியப் பெருமை கொண்டவர் கரியமாணிக்கம் அம்பலம். திருவாடானை தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். இதில் முதல் முறை சுயேச்சையாக வெற்றி பெற்றவர். 2 முறை ராஜாஜியின் சுதந்திராக் கட்சி சார்பிலும், ஒருமுறை காங்கிரஸ் சார்பிலும் வெற்றி பெற்றவர்.

5 முறை எம்.எல்.ஏவாக இருந்த ராமசாமி
அதன் பிறகு இவரது மகன். கே.ஆர். ராமசாமி 5 முறை திருவாடானை தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்த திருவாடானையை 2011 தேர்தலில் திமுக கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதிமுக கைப்பற்றி விட்டது.

காரைக்குடியில் முதல் முறையாக
கடந்த 2011 தேர்தலிலேயே காரைக்குடிக்கு மாறி விட்டார் ராமசாமி. அத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சித. சோழன் பழனிச்சாமியிடம் தோல்வியுற்றார். ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோவை வீழ்த்தி எம்.எல்.ஏவாகி விட்டார்.
மூத்த தலைவர் என்ற முறையிலும், காங்கிரஸ் பாரம்பரியத்தின் பேரிலும் ராமசாமியை காங்கிரஸ் சட்டசபைத் தலைவராக்கும் முயற்சிகள் பலிக்குமா.. ராமாசாமி சட்டசபை காங்கிரஸ் தலைவர் ஆவாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications