வீடு புகுந்து கல்லூரி உதவி பேராசிரியை வெட்டிக் கொலை- தாய் படுகாயம்: போலீஸ் விசாரணை
கோவை: கோவை அருகே தாயுடன் வீட்டில் இருந்த கல்லூரி உதவி பேராசிரியை மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவரது தாயார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மின்வாரிய அலுவலகத்தில் ஆபரேட்டராக பணியாற்றுபவர் தர்மராஜ் (50), இவரது மனைவி மாலதி (48). இவர்களது மூத்த மகள் ரம்யா (24), கோவை அருகே கிணத்துக்கடவிலுள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ரம்யா விடுமுறை நாட்களில் மட்டும் வீட்டிற்குச் செல்வது வழக்கம்.
கோவை மாவட்டம் காரமடை ஆசிரியர் காலனி அருகே கணேஷ் நகரில் தர்மராஜ், புதிதாக கட்டியுள்ள வீட்டில் மாலதியின் தாய் ரங்கம்மாள் மட்டும் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில், அனைவரும் காரமடை வீட்டில் பாட்டியுடன் தங்கிச் செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று மொகரம் பண்டிகையை ஒட்டி மாலதி மற்றும் ரம்யா பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளனர். ரங்கம்மாள் உறவினர் வீட்டிற்கு சென்று விடவே, வீட்டில் ரம்யாவும், மாலதியும் மட்டும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை மனைவி மற்றும் மகளுக்கு போன் செய்துள்ளார் தர்மராஜ். ஆனால், யாரும் போனை எடுக்காததால் அவரே நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு லேசாக திறந்து கிடந்துள்ளது. உள்ளே தலையில் பலத்த காயத்துடன் மாலதி ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். அருகே, ரம்யா ஆடைகளற்ற நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தர்மராஜ், உடனடியாக இது தொடர்பாக போலீசுக்கு தகவல் அளித்தார். மனைவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
விரைந்து வந்த போலீசார் ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆடைகளற்ற நிலையில் ரம்யா கிடந்ததால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தான் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் விலை மதிப்புள்ள கேமரா ஒன்றைத் தவிர நகைகளோ, பணமோ எதுவும் திருட்டுப் போகவில்லை என தெரியவந்துள்ளதால், இக்கொலைக்கான காரணம் திருட்டாக இருக்காது என போலீஸ் சந்தேகிக்கின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாலதிக்கு சுயநினைவு திரும்பிய பின்னரே கொலையாளிகள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சம்பவ இடத்தை, டி.ஐ.ஜி., ஆயுஷ்மணிஸ் திவாரி ஆய்வு செய்தார். வழக்கு பதிவு செய்த காரமடை போலீசார், கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை அமைத்துள்ளனர். இக்கொலை சம்பவம் காரமடையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.