கள்ளக்குறிச்சி வேட்பாளரை மாற்றக்கோரி ஜெ. வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி!
சென்னை: நிலமோசடி புகாரில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி வேட்பாளரை மாற்றக்கோரி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வீட்டிற்கு முன் கணவன், மனைவி இருவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அதுமுதற்கொண்டு, பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை மாற்றக்கூறி, பல்வேறு பக்கங்களில் இருந்தும் கட்சித் தலைமைக்கு புகார் மனுக்கள் பறந்தவண்ணம் உள்ளன.

அதிலும், அதிரடியாக வேட்பாளர்களை மாற்றக்கோரி, சில தொண்டர்கள் தீக்குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரங்களிலேயே சேலம் தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக உள்ள செல்வராஜுவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்காமல், புதிதாக வேறொருவரை தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார். அசம்பாவிதம் ஏற்படாமல் சுற்றி இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றினர்.
இந்நிலையில், இன்று கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் பிரபுவை மாற்ற வேண்டும் என அதே ஊரைச் சேர்ந்த கோபு, பரிமளா என்ற தம்பதி தனது ஆதரவாளர்களுடன் போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென பரிமளா தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரைக் காப்பாற்றினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து போலீசார் கலைந்து போக வைத்தனர்.

கோபுவிற்கு சொந்தமான நிலத்தை அதிமுக வேட்பாளர் பிரபு அபகரித்துக் கொண்டதாகவும், எனவே நில மோசடி செய்த அவரை வேட்பாளராக அறிவிக்கக்கூடாது, மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவங்களால் ஜெயலலிதா வீட்டு முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.












Click it and Unblock the Notifications