ஜாமீன் கிடைக்கலையே: சிறையில் பெண் கைதி தூக்கு போட்டு தற்கொலை!
புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாமீன் கிடைக்காத விரக்தியில் அவர் இந்த முடிவை மேற்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
காரைக்காலை சேர்ந்த அம்பிகா என்ற பெண் கடந்த அக்டோபர் மாதம் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். அப்போது, அந்த மணப்பெண்ணுக்கு வயது குறைவு என்று காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அம்பிகா தனது 16 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அம்பிகா மீது குழந்தை திருமணம் செய்து வைத்ததாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்தபடி அம்பிகா ஜாமீன் கோரி இருந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில், தான் சிறையில் அடைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் ஜாமீன் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் அம்பிகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கிடையே பெண் கைதி அம்பிகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.