மீண்டும் அதிகரிக்கும் குழந்தை திருட்டு-நாகப்பட்டினத்தில் பரபரப்பு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ஒரு பெண், பச்சிளம் குழந்தையை திருடிச் சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த திருகண்ணபுரம் பெரிய நாட்டார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் கோயமுத்தூரைச் சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கிருத்திகா மீண்டும் கர்ப்பமடைந்து பிரசவத்திற்காக திருகண்ணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த வாரம் கிருத்திகா 2 வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதையடுத்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக கிருத்திகா நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கிருத்திகாவுக்கு உதவியாக கணவர் பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் தங்கி இருந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் வெளியே சென்ற நேரத்தில் தனியாக இருந்த கிருத்திகாவிடம் அங்கு வந்த 30 வயது மதிக்கதக்க கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி குழந்தையை தூக்கி சென்றார்.
நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த கிருத்திகா தனது கணவருக்கும், அருகில் இருந்தவர்களிடமும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் மருத்துவமனை முழுவதும் தேடியும், அந்த பெண்ணும், குழந்தையும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் மாவட்ட போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவை சோதனை செய்தனர். இதில் குழந்தையை திருடிச்சென்ற பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது.
கேமிராவில் பதிவாகி இருந்த உருவத்தை வைத்து குழந்தையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருத்திகா முதலில் திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அங்குள்ள ஊழியர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்குள்ள ஊழியர்களை திட்டச்சேரி போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.