கரூர் அருகே சர்ச்சுக்குச் சென்ற பெண்ணுக்கு சூடு.. 4 பேர் மீது புகார்
கரூர்: கரூர் அருகே சர்ச்சுக்குப் போன பெண்ணை சிலர் சூடு போட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக 4 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த ஜல்லிப்பட்டி அருகே உள்ள குளத்தூர் பகுதியில் வசிப்பவர் மாணிக்க செல்வன், இவரது மனைவி வளர்மதி (வயது 29), இவர் கடந்த 4 மாதமாக கரூரில் உள்ள தேவாலயத்திற்கு சென்று வந்த நிலையில் நேற்று எங்கேயோ சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிலர் அவரது வீட்டுக்கு வந்து, வளர்மதியின் மகன், மகளிடம் உங்கள் அம்மா சர்ச்சுக்குத் தானே சென்றுள்ளார் என்று கேள்வி கேட்டுள்ளனர்.
பின்னர் அப்பகுதியை சார்ந்த சுரேஷ், ஈஸ்வரி, தீர்த்தன், போதி ஆகிய 4 பேரும் தீக்கட்டையால் சூடு வைத்துள்ளனர். பின்னர் வளர்மதியின் முடியை சுட்டுள்ளனர். இதனையடுத்து கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வளர்மதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அகில இந்திய கிறிஸ்துவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்க நிறுவனத்தலைவர் ஜோஸ்வாஸ் ஸ்டீபன் வளர்மதியின் உடல் நிலை குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது வளர்மதி கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை நடத்தி வந்த நிலையில் இன்று காலை அங்குள்ள சமூக விரோதிகள் 4 பேர் பெண்ணெண்றும் பாராமல் தீ சூடு வைத்துள்ளனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த ஜோஸ்வாஸ் ஸ்டீபன், இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளோம். மேலும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் 23 ம் தேதி கரூரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்த உள்ளோம் என்றார்.