பெண்களுக்கு அடுப்பங்கரையிலிருந்து இன்னும் விடுதலை கிடைக்கலையே!
சென்னை: என்னதான் தீர்ப்புகள் வந்தாலும், பெண்களுக்கு இன்னும் அடுப்பங்கரையிலிருந்து விடுதலை கிடைக்கலையே என்று குமுறல் வெளியிடுகிறார் நமது சென்னை வாசகர் ப்ரியன்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த வாசகர் ப்ரியன் நமக்கு அனுப்பியுள்ள ஒரு குறுங்கட்டுரை:

அன்பு வணக்கங்கள்
பெண் கொடுமை குறித்து கூற விரும்புகிறேன். அதாவது நமக்கு தெரியாமல் இந்த உலகத்தில் நிறைய நடக்கின்றன. நமக்கு தெரிந்து பாதி, தெரியாமல் கடல் அளவு இருக்கிறது. என்ன தான் பெண்களுக்கு சம உரிமை வழங்கினாலும் இன்னும் அடுப்பங்கரையில் அடிமைப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.
இன்றும் நிறைய வீடுகளில் பெண்கள் அவர்களுக்கு பிடித்த உணவு, உடை, தூக்கம், இதுபோல சாதாரணவற்றையும் கூட குடும்பத்தில் உள்ளவர்களுக்காக தியாகம் செய்கிறாள் பெண். ஆனால் யாரும் இதைப் பற்றி யோசிப்பது இல்லை. அவளுக்கென்று பல ரோல்கள் உள்ளது. வேலையில் ஒரு பணிப் பெண் அல்லது மேலாளர், அம்மா, தங்கை, அக்கா, தோழி, காதலி, மனைவி... என்று பல. ஆனால் அவளுக்கென்று முழு சுதந்திரம் என்பது நம் நாட்டில் குறைவு தான் என்பேன்.
எவ்வளவு கடினமான வேலை என்றாலும் அவள் தான் செய்ய வேண்டும். இதில் பலரின் பேச்சுகளுக்கும் ஆளாக நேரிடும். ஆண்களுக்கு நிகரானவள் தான் பெண். இதை என்று நம் சமூகம் உணர போகின்றது என்று தெரியவில்லை. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் பெண் குழந்தைகளை படிக்க வைக்க கூட யோசிக்கின்றனர்.
ஆணாதிக்கம் அதிகம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா ஆண்களும் கெட்டவர்கள் என்று சொல்லவில்லை. நிறைய ஆண்கள் இன்றும் பெண்களுக்கு ஆதரவாக, அனுசரணையாகவே உள்ளனர். அவர்களுக்கு நன்றி. உதாரணமாக ஐயப்பன் கோவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள். ஆனால் இன்னும் வீட்டிற்குள் நிறைய பெண்கள் அடிமைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
எத்தனையோ பெண்கள் பற்றிய திரைப்படங்கள் வந்தாலும் இரண்டு வாரங்கள் அதை பற்றி பேசுவார்கள். அதன் பிறகு அடுத்த படம் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். இவ்வளவுதான் வாழ்க்கை. ஒரு விடுகதையாகவே முடிகிறது பெண்களின் வாழ்க்கை.
இப்படிக்கு
ப்ரியன்












Click it and Unblock the Notifications