விஷ்ணு ப்ரியா வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது: ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
சென்னை: டி.எஸ்.பி. விஷ்ணு ப்ரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணு ப்ரியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தலித் வாலிபர் கோகுல் ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அவருக்கு உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவினர் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி விஷ்ணு ப்ரியாவின் தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து அவர் மேல்முறையீடு செய்தார்.
அவரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் குமார் அக்னிஹோத்ரி மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு மற்றும் காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விஷ்ணு ப்ரியாவின் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து ரவியின் வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டனர். மேலும் இறுதி விசாரணை ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவித்து வழக்கை விசாரணையை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications