ஏற்காட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சேலம் கலெக்டர் தகவல்
சேலம்: ஏற்காடு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், மின்வெட்டு இருக்காது என்றும் சேலம் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மகரபூசணம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஏற்காடு இடைத் தேர்தலுக்கு இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அடுத்த கட்டமாக 4ம் தேதி வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
சாதகம், பாதகம் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் நடுநிலையோடு செயல்படுகிறது. வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் நாளை காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் விவரமும்,அவர்கள் எங்கு பணியாற்றுவார்கள் என்ற விவரமும் இன்று இரவு தான் தெரிய வரும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஊழியர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று விட்டார்களா என்பதை கண்காணிக்க 36 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
290 வாக்குச்சாவடிகளும் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு உள்ளதால் வாக்குச்சாவடிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ஓட்டுக்கள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அன்று இரவே ஓட்டு எண்ணிக்கை நடக்கும் சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும். மேலும் தேர்தல் வெளிப்படையாக நடைபெறுவதையொட்டி மாவட்ட கல்வி அதிகாரி அறையில் வாக்குப்பதிவு இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபடுவார்கள். தேர்தலின் போது வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக ரூ 1 லட்சம் பணம் கொண்டு வரப்பட்டதை கண்டுபிடித்து தாசில்தார் சந்திரசேகர் பறிமுதல் செய்து ஒப்படைத்து உள்ளார்.
இடைத்தேர்தல் அன்று மின்வெட்டு இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கலெக்டர், இருக்காது என்று சிரித்தபடி கூறினார் கலெக்டர் மகரபூஷணம்.












Click it and Unblock the Notifications