தவறை உணர்ந்து வந்தால் மீண்டும் அழகிரியை சேர்த்துக் கொள்வோம்: ஆர்.எஸ். பாரதி
சென்னை: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, செய்த தவறுகளை உணர்ந்து இனி அவ்வாறு நடந்துகொள்ளமாட்டேன் என உறுதிமொழி கொடுத்தால் தலைவர், பேராசிரியர், ஸ்டாலின் ஆகியோர் கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி பரிசீலிப்பார்கள் என்று திமுகவின் புதிய அமைப்புச் செயலாளார் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
திமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த கலியாணசுந்தரம், தயாநிதி மாறன், கனிமொழி, ராசா ஆகியோரை ஒதுக்கி வைக்க வேண்டும். மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக கலியாணசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி அமைப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
திமுகவில் 13 வயதில் தொடங்கிய தனது பயணம், கட்சியின் கொள்கைகள், தற்போது பொறுப்பேற்றுள்ள அமைப்புச் செயலாளர் பதவி என அனைத்தையும் விரிவாக நக்கீரன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். அதன் விவரம்:

உழைப்பும் நேர்மையும்
நம்பிக்கையும் உழைப்பும் நேர்மையும்தான். 13 வயதில் (1952) கழகத்தில் சேர்ந்த எனக்கு, 1965-ல் முதல் பொறுப்பாக ஆலந்தூர் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பதவி தரப்பட்டது. 1972-ல் கட்சியை விட்டு எம்.ஜி.ஆர். போனபிறகு எம்.ஜி.ஆர்.மன்றத்தை கலைத்த முதல் தொண்டன் நான்தான். அதன்பிறகு மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகள் தரப்பட்ட நிலையில், 1980-ல் சட்டத்துறை இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டேன்.

நீண்ட கால பயணம்
அப்போது என்.வி.என்.சோமு செயலாளர். அவரை அமைப்பு செயலாளராக 1996-ல் கலைஞர் நியமிக்க, என்னை சட்டத்துறைக்கு செயலாளராக்கினார். என்னுடைய நீண்டகால உழைப்பையும், அமைப்பு ரீதியாக கட்சியை முழுமையாக அறிந்தவன் என்றும் நினைத்திருப்பார்.

கலைஞருக்கு நம்பிக்கை
தொண்டர்கள் கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கம். கட்சிப் பணிகளை கட்டுப்பாட்டுடன் வழி நடத்தி செல்வாய்ங்கிற நம்பிக்கையில் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதற்கேற்ப உன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்' என தலைவர் கலைஞர். அறிவுறுத்தினார்

கடமையை நேர்மையாகச் செய்
பேராசிரியரோ, "நீண்டகாலமாக கட்சிக்கு உழைச்சவன் நீ. கட்சியின் அடிநாதமாக இருக்கும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உன் கடமையை நேர்மையாக செய்ய வேண்டும்' என சொல்லி வாழ்த்தினார்.

ஸ்டாலின் ஆலோசனை
ஸ்டாலினோ, "கட்சிக்காரர்கள் கொடுக்கும் புகார்களையும் மற்ற விபரங்களையும் சேகரித்து சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

என்.டி.ஆருக்கு ஈர்ப்பு
மறைந்த என்.டி.ஆர். தெலுங்கு தேசத்தை உருவாக்கியபோது, கட்சியின் சட்ட விதிகளை உருவாக்க நினைத்தார். அப்போது தி.மு.க.வின் பை-லா பற்றி அறிந்திருந்ததால் அதன் மீது அவருக்கு ஈர்ப்பு வந்து உபேந்திரா என்பவரை கலைஞரிடம் அனுப்பி வைத்தார். அதன்படி அமைந்ததுதான் தெலுங்கு தேசத்தின் சட்ட விதிகள். இன்றைக்கும் அந்த கட்சி இயங்குவது தி.மு.க.வின் சட்ட விதிகளின்படிதான்.

உள்கட்சி ஜனநாயகம்
தி.மு.க.வின் உள்கட்சி ஜனநாயக கோட்பாடுகளுடன்தான் அரசியல் செய்ய வேண்டும் என்பது இடதுசாரிகளின் எண்ணம்.

திமுகதான் தாய்வீடு
பொதுவாகவே தி.மு.க.வின் கொள்கை கோட்பாடுகளை வரித்துத்தான் தங்களின் கட்சி விதிகளை அமைத்துக் கொண்டிருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள் என்பதில் தொண்டர்களுக்கு எப்போதுமே இறுமாப்பு உண்டு. அந்தவகையில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தி.மு.க. தான் தாய் வீடு.

பிரச்சினைகளை சரிசெய்வேன்
கட்சியின் உயிர்நாடி தொண்டர்கள்தான். அவர்களின் குரல்களுக்கு செவி கொடுத்தாலே பாதி பிரச்சினைகள் சரியாகிவிடும். முழுநேரப் பணியாக தலைமைக்கழகத்தில் அமர்ந்து, தொண்டர்களின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் அறிந்து அதனை உடனுக்குடன் தலைவரின் கவனத்துக்கு கொண்டுசென்று பிரச்சினைகளை சரிசெய்வதே என் முதல் திட்டம்.

கட்சி விரோத நடவடிக்கை
நக்கீரனின் சுலோகம் போல, நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்பதுதான் கலைஞரின் முடிவு. கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்கள் எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கலைஞர் சமரசம் செய்துகொள்ளமாட்டார் என்பதற்கு இது உதாரணம்.

எம்.ஜி.ஆர் மீது நடவடிக்கை
பொதுக்குழுவில் பேசவேண்டியதை பொதுமேடைகளில் எம்.ஜி.ஆர். பேசினார் என்பதற்காகத்தான் அவர் மீது நடவடிக்கை பாய்ந்தது. அதேபாணியை கோபால்சாமியும் கடைப்பிடித்ததால்தான் அவர் மீதும் நடவடிக்கை.

மகன் மீது நடவடிக்கை
தனது மகன் அழகிரி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்கவில்லை. அதே அளவுகோல்தான் கல்யாணசுந்தரம் விசயத்திலும் நடந்திருப்பதாக கருதுகிறேன்.

தவறுகளை உணர்ந்தால்
கட்சியின் கட்டுப்பாட்டை மீறுகிற வகையிலும் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துகிற வகையிலும் நடந்துகொள்வதால்தான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. செய்த தவறுகளை உணர்ந்து இனி அவ்வாறு நடந்துகொள்ளமாட்டேன் என உறுதிமொழி கொடுக்க யார் முன்வந்தாலும் அதனை கலைஞரும் பேராசிரியரும் தளபதியும் பரிசீலிப்பார்கள்.

வெற்றி, தோல்வி முக்கியமல்ல
சில தேர்தல்களில் நான் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால், ஆலந்தூர் நகராட்சி சேர்மன் தேர்தலில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றிருக்கிறேனே. பொதுவாக, தேர்தலில் நடக்கும் வெற்றி தோல்விகளை மையப்படுத்தி கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி.












Click it and Unblock the Notifications