கரண்டுக்கே ஷாக் கொடுத்தவருய்யா கேப்டன்.. யோகாவால கட்டுப்படுத்த முடியுமா என்ன?
சென்னை: யோகா பயிற்சி செய்த பிறகும் விஜயகாந்த்தால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை இன்றைய எம்.எல்.ஏ மீதான அறை சம்பவம் நிரூபித்துள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில், உள்ள ஈஷா யோகா மையத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மகன் சண்முக பாண்டியனுடன் யோகா மையத்தில் 1 வார கால யோகா பயிற்சியில் சேர்ந்தார்.
அவருக்கு ஈஷா யோக மைய பயிற்றுனர்கள் யோகா பயிற்சி அளித்தனர். தொடர்ந்து சிறப்பு யோகா பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுத்தார் விஜயகாந்த்.
பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஓய்வுக்காக ஈஷா மையத்திற்கு வந்த விஜயகாந்த் தனது கட்சியினர் யாரையும் சந்திக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அமைதியான சூழ்நிலைக்காக விஜயகாந்த் ஈஷா யோகா மையத்தில் தங்கி இருந்தார்.
பயிற்சிக்கு பிறகு கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த, விஜயகாந்த், ஈஷா யோக மையத்தில் மேற்கொண்ட ஒரு வார யோக பயிற்சியில் உடல் மற்றும் மன ரீதியாக புத்துணர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று பண்ருட்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்ற விஜயகாந்த், தனது கட்சி எம்.எல்.ஏ சிவக்கொழுந்துவை தாக்கினார். அந்த படம் தற்போது வைரலாக பரவிக்கொண்டுள்ளது.
கோபத்தை குறைப்பதற்காக யோகா பயிற்சி செய்த விஜயகாந்த், பயிற்சி முடிந்த ஒரு சில நாட்களிலே எம்.எல்.ஏவை அடித்துள்ளார்.
இதன்மூலம், யோகா பயிற்சியால் விஜயகாந்த்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது அவரது தொண்டர்கள் ஆதங்கமாக உள்ளது.
நரசிம்மா திரைப்படத்தில், விஜயகாந்த்துக்கு மின்சார ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்த முனைவது போன்ற காட்சி இருக்கும். அப்போது மின்சாரமே, விஜயகாந்த் உடலில் பாய்ந்து ஷாக் தாங்க முடியாமல் போய்விடும். இதனால், மீட்டர் பெட்டி வெடித்து சிதறுவது போல காட்சி இருக்கும்.
அதேபோல, விஜயகாந்த்துக்கு யோகா பயிற்சி கொடுத்தபோதும், யோகாவை 'தூக்கியடித்துவிட்டார்' போலும் கேப்டன்.