ஒருதலைக்காதல்... சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்திக்குத்து..!
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர்.
சென்னை: சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் வினோதினி தொடங்கி காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல் தற்போது அதிகரித்து வருகிறது.
சென்னை கிண்டியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அரவிந்தன் என்பவர் பணியாற்றி வருகிறார்.அவர் சென்னையில் தங்கி பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவரை பல மாதங்களாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.பல முறை தனது காதலை அந்த பெண்ணிடம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த பெண் அரவிந்தனின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் அரவிந்தனின் தொந்தரவு நீடித்தது.
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு பண்டிகையைக் கொண்டாட தனது சொந்த ஊருக்கு அந்த இளம்பெண் நேற்றிரவு கிளம்பினார். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த அரவிந்தன், அந்த பெண்ணிடன் மீண்டும் தனது காதலை தெரிவித்துள்ளார். அப்போதும் அந்த பெண் காதலை ஏற்க மறுக்கவே,கோபமடைந்த அரவிந்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.
கத்தியால் தாக்கப்பட்டதில் காயமடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதனை கேட்ட அருகிலிருந்தவர்கள் அரவிந்தனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு முகத்தில் சிறிய அளவில் மட்டுமே காயம் ஏற்பட்டதால்,முதலுதவிக்கு பின்னர் தனது பெற்றோர்களுடன் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அரவிந்தனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.