வேலூரில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு -4 பேர் படுகாயம்
அதிக உஷ்ணம் காரணமாக பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்தார்.
வேலூர்: வேலூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் அப்துல்காதர். இவர் கன்சால்பேட்டை காந்தி நகரில் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று காலை தொழிலாளர்கள் சிவகுமார் 35, தீபா 26, கவியரசன் 32, ஷீலா 35, புஷ்பா 30, உள்ளிட்ட சுரேஷ், முகமது அலி, சபியுல்லா ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 10.30 மணியளவில் பட்டாசு தயாரிப்பதற்கான பாஸ்பரஸ் ரசாயனக் கலவையை தயார் செய்து கொண்டிருந்தபோது அதிக உராய்வு மற்றும் உஷ்ணம் ஏற்பட்டு திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தொழிற்சாலையின் மேற்கூரை சுமார் 20 அடிக்கு மேல் பறந்து விழுந்து நொறுங்கியதுடன் சுவர்களும் இடிந்தன.
சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். வெடி விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை மூட்டம் காணப்பட்டது. இதனால் சிறிது நேரத்திற்கு வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. தகவலறிந்து வேலூர் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் தொழிலாளர்களுக்கு உடல்முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் இளம் பெண் தீபா உடல்முழுவதும் கருகிய நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டாசுகள் வெடித்து சிதறியபடி இருந்ததால் சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு தொழிற்சாலைகளின் வெடிவிபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வீடுகள், வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கான அனுமதியை அரசு ரத்து செய்வதுடன், மற்ற பட்டாசு தொழிற்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications