குடித்துவிட்டு வண்டி ஓட்டியதை விசாரித்த ஏட்டு மீது பாய்ந்து கடித்த வாலிபர் கைது
நாகை: நாகை, ஆயப்பாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஏட்டு ஒருவரை பாய்ந்து கடித்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சோழன். இவர் நேற்று முன்தினம் இரவு ஆயப்பாடி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது காரைக்காலில் இருந்து வந்த பைக்கை நிறுத்தி அதில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினார். அதில் அந்த இளைஞர் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதால் ஆத்திரமடைந்த அவர் ஏட்டு சோழனை அடித்ததுடன் நெஞ்சில் பாய்ந்து கடித்துள்ளார். மேலும் சோதனைச்சாவடியில் இருந்த நாற்காலிகளையும் அடித்து உடைத்துள்ளார்.
காயமடைந்த ஏட்டு சோழன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.