கலெக்டர் முன்னிலையில் பெண்ணுக்கு அடி... செங்கோட்டை மனுநீதி நாள் கூட்டத்தில் பரபரப்பு!
செங்கோட்டை: செங்கோட்டையில் நடந்த மனுநீதி நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்னிலையில் இளைஞர் ஒருவர் மனு கொடுக்க வந்த பெண்ணைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டை அருகேயுள்ள வடகரை கீழ்பிடாகை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமையில் மனுநீதி நாள் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுவட்டராப் பகுதிகளை சார்ந்த எராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்டம் தொடங்கி ஏற்கனவே மக்களால் அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வடகரை பகுதியை சார்ந்த ஒரு பெரியவர் மேட்டுக்கால் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும், உடனடியாக அதை அகற்ற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க சென்றார்.

அவர் மேடையை நோக்கி செல்லும் போதே இக்கோரிக்கையை வலியுறுத்தி பேசியபடி சென்றார். உடனே மேட்டுக்கால் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் தங்களுக்கு அந்தப் பகுதியில் வசிக்க வீட்டுமனை பட்டா வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க வந்தனர்.
அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுத்தவர்களுக்கும், பட்டா கேட்டவர்களுக்கும் இடையே மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே வாக்குவாதம் உருவானது. அப்போது திடீர் என ஒரு நபர் பட்டா கேட்டு மனுக் கொடுக்க வந்த பெண் ஒருவரை ஆவேசத்தோடு தாக்கினார்.
மீண்டும் அப்பெண் ஏதோ பேச, மீண்டும் அந்த வாலிபர் அப்பெண்ணை தாக்கினார். இதனை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள்,பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாத்துக்காப்புக்கு வந்த போலீசார் விரைந்துவந்து அந்த வாலிபரையும், அவரால் தாக்கப் பட்ட பெண்ணையும் அப்புறப்படுத்தினர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உருவானது. பின்னர் மனுநீதிநாள் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications